
posted 31st August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் கவனயீர்ப்பு போராட்டங்கள்
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்று (30) புதன் அனுஷ்டிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் அரசியல், வன்முறை மற்றும் போர் போன்ற காரணிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்திருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் 2011ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இம்முறை "அவர்களை நினைவு கூறுவோம், அவர்களை மறக்க மாட்டோம்" என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு இந்த தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.
இலங்கையிலும் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வௌிப்படுத்துமாறு வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் வவுனியா நகரில் சுமார் 2383 நாட்களை கடந்து நேற்றும் நடந்தது.
இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இன்றும் தேடல்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.
வடக்கு - கிழக்கில் போராட்டங்கள்
இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்று வடக்கு - கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வடக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் , மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்டப் பாதை ஊடாக தபாலகம் வைத்தியசாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களை சுமந்து கொண்டும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று (30), வவுனியாவில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பாரிய ஆர்ப்பாட்மொன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்;
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இன்று நாம் நினைவுகூருகின்றோம். சுமார் 30,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப் போருக்கு முன்னும், பின்னும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
எனவே சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் மூலமே நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையினை வெளிப்படுத்த முடியும்.
போரின் போதும், அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழு ஒன்று வன்னியில் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் சிறுமிகளை தேர்ந்தெடுத்தது. அந்த துணை இராணுவப் படைத் தலைவர் இப்போது எம்.பி.யாக இருப்பது எமக்கு வருத்தம் அளிக்கிறது.
அதுமட்டுமல்லாது இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பல தமிழ் குழந்தைகள் அருகில் உள்ள புத்த மடங்களில் பயிற்சி பெற்று இளம் பௌத்தபிக்குகளாய் ஆகியுள்ளனர். அவர்கள் சிங்களக் குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு இப்போது சிங்களவர்களாக வாழ்கிறார்கள்.
தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக எமது தமிழ்த் தலைவர்களும், மக்களும் அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்த வேண்டும். இது நம் குழந்தைகளைத் தேடுவதற்கு உதவும்.
தமிழ் இனத்திற்கான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் பங்களிப்பை நாம் பாராட்டுகின்றோம். அவர் சர்வதேச இராஜதந்திரிகளுடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான உதவியை எமக்கு செய்யவேண்டும். அங்கு தமிழர் இறையாண்மைக்கான எங்கள் விருப்பத்தை திறம்பட வெளிப்படுத்த முடியும்” இவ்வாறு தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதகுருமார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது போது ”எமது உறவுகள் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேச விசாரணைவேண்டும், நஷ்டஈடு எமக்கு வேண்டாம், சாட்சியங்களை அழிக்காதே, ஆட்கடத்தலை நிறுத்து, உள்ளக விசாரணை வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.
கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊடக அறிக்கையை வாசிக்க கிளிக் செய்யுங்கள்>>>>> ஊடக அறிக்கை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)