
posted 9th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
இந்திய மீனவர்கள் 9 பேர் விடுதலை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று (08) நிபந்தனையுடன்கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை இரண்டு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் யாழ். மாவட்ட நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில் மீனவர்களின் வழக்கு செவ்வாய்க்கிழமை (08) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி ஜே. கஜநிதிபாலன் மீனவர்கள் 9 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீரியல்வளத்துறை அதிகாரிகளால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதப்படி 18 மாத சாதாரண சிறைத் தண்டனை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மீனவர்களின் இரண்டு படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் 18ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுக்கொள்ளப்படவுள்ளது.
அன்றைய நாளில் படகின் உரிமையாளர்கள் மன்றில் ஆதாரங்களுடன் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)