
posted 29th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பெற்றோரை எதிரிகளாக கருதும் அவல நிலை
கைப்பேசி பாவிக்கும் குழந்தைகள் மனநலம் குன்றி, பெற்றோரை எதிரிகளாக கருதும் அவலநிலை உருவாகும். எனவே குழந்தைகளுக்கு கைப்பேசியை வழங்காதீர்கள் என்று அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய கொடையாளர் கௌரவிப்பு விழாவில் உரையாற்றிய சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தெரிவித்தார்.
மேற்படி கொடையாளிகள் கௌரவிப்பு விழா பாடசாலை அதிபர் பொன் பாரதிதாசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் ஆசிரிய ஆலோசகர் பி.வி. குணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .
அங்கு அன்னமலை கொடையாளிகளால் செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.
கொடையாளி சித்திர சேனன் விஜிகரனின்( ஜேர்மனி) ஏற்பாட்டில் வரையப்பட்ட பாடசாலை மதில் சுவர்ஓவியங்கள் திறந்து வைக்கப்பட்டன.
அத்துடன் கொடையாளி அருள்ராஜா ஜெகதீசனின் (அவுஸ்திரேலியா) ஏற்பாட்டில் நிறுவப்பட்ட கொடிக்கம்பத் தளம் மற்றும் காலை ஆராதனை மேடை என்பன திறந்து வைக்கப்பட்டன.
மேலும், கொடையாளி கே.எம். நிறோஜன் (கொழும்பு) அனுசரணையில் பெற்றோர் ஆசிரியர் ஒன்றுகூடல் மண்டபத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
அங்கு வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா மேலும் பேசுகையில்;
கைப்பேசிகளால் எமது நிம்மதி குறைகிறது. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளியில் விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர். இணையக் காணொளி விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் தீவிரமாக அவதானம் செலுத்துவதால் மனநல நோய்க்கு உள்ளாகின்றனர். இதனால் பிள்ளைகள் கல்வியில் தோல்வியடைந்து பெற்றோரை எதிரிகளாக நோக்குகின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும்.
எனவே, குழந்தைகளுக்கு இயன்றவரை கையடக்க தொலைபேசியை வழங்குவதை பெற்றோர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். கொடையாளிகள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)