
posted 9th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை!
எஸ் தில்லைநாதன்
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (08) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின்போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில்;
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும், 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும், 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும், ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர்.
அதேவேளை, புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகி வருகின்றனர் என்றனர்.

சிமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு - 7ஆவது நாளாக தொடரும் போராட்டம்
எஸ் தில்லைநாதன்
கிளிநொச்சி, பூநகரி பொன்னாவெளி சிமெந்து தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று (09) புதன் 07 ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து மக்கள் ஒன்றியத்தால் மூன்று கிராமங்களான வேரவில், வலைப்பாடு,கிராஞ்சி ஆகிய கிராமங்கள் இணைந்து சிமெந்து தொழிற்சாலைக்கு எதிராக நடத்தும் சுழற்சி முறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் வேரவில் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்று வருகிறது.
பொன்னாவெளி எனும் பழமை வாய்ந்த கிராமத்தில் சிமெந்து தொழிற்சாலைக்கான சுண்ணக்கல் அகழ்வை மேற்கொள்வதற்கு ரோக்கியோ சிமெந்து நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு பணிகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடற்கரைக்கு அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 300 மீற்றர் வரையான ஆழத்தில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படும்போது அதன் விளைவாக தங்களது கிராமங்களுக்குள் கடல் நீர் உள்வரும் எனவும் அதனால் கிராம மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் தெரிவிக்கும் பொதுமக்கள், தொழிற்சாலை கழிவுகள் காரணமாக மோசமான நோய்த் தாக்கங்களுக்கும் பொது மக்கள் முகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு
எஸ் தில்லைநாதன்
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடல் மட்டத்தில் இருந்து வெறும் ஒன்றரை மீற்றர் உயரமே கொண்ட இயக்கச்சி பிரதேசத்தின் ஆற்று சமவெளி பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக மணல் அகழப்பட்டு யாழ்ப்பாணத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மணல் அகழ்வை உடனடியாக தடுக்காவிட்டால் மிக விரைவில் இயக்கச்சி பிரதேசத்தின் நிலங்களும் மாற்றமடைந்து மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என பொது மக்கள் தெரிவித்தனர்.
எனவே குறித்த விடயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொண்டு விரைவில் குறித்த மணல் அகழ்வை தடுக்குமாறு கிராம மக்கள் கோரியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)