
posted 8th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பௌத்த இடங்களாக பிரகடனப்படும் தமிழர் பிரதேசங்கள்
இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ற அறிக்கையில்;
இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களை பௌத்த அடையாள இடங்களாக மாற்ற நினைப்பது மிகுந்த வேதனை தருகிறது. கிழக்கில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சைவ மக்களின் புனித தீர்த்தமாக பலநூறு வருடங்களாக பேணிப் பாதுகாக்கப்பட்டது.
சைவசமயத்தை பெரிதும் நேசித்த இலங்கை வேந்தன் இராவணனோடு தொடர்புடைய இப்புனித தீர்த்தம் இன்று தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் அபகரித்துள்ளமை அநீதியான செயலாகும். தொடர்ந்து தொன்மை வாய்ந்த சைவ ஆலயங்களை திட்டமிட்டு அபகரிக்க நினைப்பது அதர்மச் செயலாகும்.
தற்போது பறாளாய் முருகன் கோவிலில் உள்ள அரசமர விருட்சத்தை சங்கமித்தை வரலாற்றோடு தொடர்புபடுத்தி வர்த்தமானி வெளியிட்டுள்ளமை சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. சைவ நிறுவனங்களையோ, வடக்கில் உள்ள பல்கலைக்கழக அறிஞர்களையோ தொடர்பு கொள்ளாமல் தொல்லியல் திணைக்களம் புதிய பிரகடனங்கள் செய்வது கவலையளிக்கிறது. கீரிமலைப் புனித தீர்த்த கேணியை திடீரென தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது மிகவும் தவறான செயலாகும்.
தெல்லிப்பழை கிராம முன்னேற்றச் சங்கம், வல்லிபுரம் என்ற பெரியவரின் நிதியுதவியுடன் 1916ஆம் ஆண்டு தூர்வைக் குளமாக இருந்த இக்கேணியை பொலிகலால் கட்டி பாதுகாத்தது. இன்றுவரை வலி. வடக்குப் பிரதேச சபை குளத்தைப் பாதுகாப்பதுடன் காவலர்களை நியமித்து கண்காணித்து வருகிறார்கள்.
திணைக்களத்திற்கு உரித்தாக பிரகடனம் செய்திருப்பது நீதியற்ற செயல். எனவே, ஜனாதிபதி தொல்லியல் திணைக்களத்தின் மேற்குறித்த பிரகடனங்களை மீளப்பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவமக்களின் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறது. தாங்கள் இவ்விடயத்தில் உடன் அக்கறை எடுத்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)