
posted 20th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஜனாதிபதியின் தந்திரம்
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம். இந்தப் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இலங்கை அரசியலமைப்பிலிருக்கும் இந்தச் சட்டம் இன்னும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் மாறி மாறி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும், தலைவர்களும் இலங்கையின் அரசியலமைப்பையே மீறிக் கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கையைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவந்து அனுமதியைப் பெறவேண்டும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே அன்று 1987இல் 6இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்தில்தான் இந்த 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உட்பட அக்கட்சியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்களப் பிரதிநிதிகளை மாத்திரம் வைத்தே 6இல் 5 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்குக் கொண்டுபோகவேண்டிய தேவை இருக்காது.
ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சிங்கள மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக இருக்கும் அரசியல்வாதிகளைத் தட்டியெழுப்பி இனங்களுக்கடையிலே மோதலை, முறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்கும் சூழ்நிலைக்கு ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
அதுமாத்திரமல்லாமல், தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் கூறுகின்றார்கள். இந்தப் 13ஆவது திருத்தச் சட்டத்தையும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கான சட்டம் அவர்களால் பாராளுமன்றத்தில் கொண்டுவரட்டும். அதற்குப் பின்னர் இந்த நாடு எந்த நிலைமைக்குச் செல்கின்றது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.
இந்தப் 13ஆவது திருத்தச் சட்டத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி நீண்ட காலமாக இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களை ஆழக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும். ஆனால், இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாது மாகாண சபைகளுக்கு நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அதற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உட்பட சில கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
மாகாண சபைகளுக்கு நிபுணர் குழுவை அமைப்பதென்பது மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்திரமே ஒழிய இதன் மூலம் வேறு எதுவுமே சாதிக்க முடியாது. மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த மாகாண நிபுனர் குழு அமைப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால், அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படவேண்டும் என்பது 13ஆவது திருத்தச் சட்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி, மத்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதி, அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி என மூவர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலருக்கு வரலாறு தெரியாது.
1988ஆம் ஆண்டு இறுதியில் வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையிலே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசாவை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸ நியமித்திருந்தார். அவரின் கீழ் 3000 மாகாண பொலிஸார்களை நியமிப்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு 13ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை.
அந்த வகையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)