மன்னார்  றோட்டரி கழகத்தினால் தலைமன்னார் பாடசாலைக்கு 9 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

25 வருடங்களுக்கு மேலாக பாடசாலை ஒன்றில் குடிநீருக்கு தவித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு மன்னார் றோட்டரி கழகம் குடிநீர் பெறுவதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

நீண்ட காலம் குடிநீர் வசதி இல்லாமல் இருந்த தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 9 லட்சம் ரூபா செலவில் மன்னார் றோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது

தலைமன்னார் பியர் பாடசாலையில் 450 அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். ஆசிரியர்களும், மாணவர்களும் இரண்டரை சகாப்தமாக தூய குடிநீர் வசதிகள் இன்றி பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வந்தார்கள்.

இவர்கள் குடிப்பதற்காக அயலிலுள்ள மருத்துவமனையில் இருந்தே குடிநீரைப் பெற்று வந்ததை அறிந்த மன்னார் றோட்டரி கழக நிர்வாகத்தினர் மற்றும் அதன் மன்னார் மாவட்ட தலைவர் ரொபின் ஜெயரூபன் தலைமையில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் ஒத்துழைப்போடு கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை திட்டம் நிறைவு பெற்று வியாழக்கிழமை (4) குடிநீர் திட்டம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்தினிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மன்னார் றோட்டரி கழகத்தின் அங்கத்தவர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.

இதற்கான நிதி உதவியை அவுஸ்த்திரேலியாவில் வசிக்கும் விக்னேஸ்வரன் கந்தையா அவர்கள் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மன்னார்  றோட்டரி கழகத்தினால் தலைமன்னார் பாடசாலைக்கு 9 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)