
posted 19th August 2022
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முப்பெரும் திறப்பு விழா நிகழ்வு கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக உலக வங்கியின் நிதிப்பளிப்புடன் வடிவமைக்கப்பட்ட AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக கலை, கலாசார பீடத்தில் கட்டிமுடிக்கப்பட்ட மாணவர் செயற்பாட்டு மையம் உபவேந்தரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த AHEAD நிகழ்ச்சித்திட்டத்தினூடாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரபீடம் 120 மில்லியன் ரூபா நிதி உதவியினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. சகல வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டு மையத்தில் இளம் கலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், தொழில் வழிகாட்டல் அலகு, சமூக நல்லிணக்க மையம், மாணவர் பிரத்தியேக நூலகம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மாணவர் மையத்திற்காக சுமார் 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கலை, கலாசார பீடத்தின் சகல கற்கைத் துறைகளுக்கும் தனியான நூலகத்தை அமைப்பதற்கும் AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக நிதியுதவி அளிக்கப்பட்டது. இதன்படி சுமார் 2 மில்லியன் ரூபாவில் கலை, கலாசார பீடத்தின் 8 துறைகளிலும் பிரத்தியேக நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான நூல்கள், தளபாடங்கள் போன்றனவும் திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலகங்களுக்கு உபவேந்தரினால் திறந்துவைக்கப்பட்டு குறித்த துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல், கணினி அறிவு என்பவற்றினை மேம்படுத்துவதற்காக சுமார் 18.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில் விரிவுரை மண்டபங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக 8.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு, விரிவுரை மண்டபங்களில் ஸ்மார்ட்போட், எல்.ஈ.டி திரைகள் என்பனவும் பொருத்தப்பட்டு விரிவுரை மண்டபங்கள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. கலை, கலாசார பீடத்தின் இணைய வழிமூலமான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக தனியான தரவுத்தள சேமிப்பகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
கலை, கலாசார பீடத்தினால் வழங்கப்படுகின்ற பட்டப்பின் படிப்புக் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான பட்டப் பின்படிப்பு கற்கை அலகும் உபவேந்தரினால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வலகினால் முதுமாணி, முதுதத்துவமாணி, கலாநிதி கற்கைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் சுமார் 12 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் கலை, கலாசார பீடத்தின் உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிதியுதவியின் கீழ் நிறைவு செய்யயப்பட்ட திட்டங்களும் உபவேந்தரினால் திறந்து வைக்கப்பட்டு பீடாதிபதியிடம் கையளிக்ககப்பட்டன.
இம்முப்பெரும் திறப்புவிழா நிகழ்வில் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் பொறியியலாளர் என்.டீ. சிராஜுதீன் பதிவாளர் எச். அப்துல் சத்தார், பிரதிப் பதிவாளர் எம்.ஐ. நௌபர், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி ஏ. சபீனா எம்.ஜீ. ஹசன், தொழில்நுட்பப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். மஜீத், துறைத்தலைவர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பதில் நிதியாளர் வன்னியாராச்சி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட உதவிப் பதிவாளர்கள், பல்கலைக்கழக உலக வங்கி நிதித்திட்டங்களின் பொறுப்பாளர் பேராசிரியர் எம்.ஏ.எம்.றமீஸ், பல்கலைக்கழகப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பஷீல், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.டீ.ஏ. அஸ்ஹர், கலை, கலாசார பீடத்தின் நிகழ்ச்சித்திட்ட உருங்கிணைப்பாளர் பௌசுல் கரீமா, குறித்த செயற்றிட்டங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர்கள், பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY