
posted 1st September 2022
வடக்கு கிழக்கில் இடைக்கால நிருவாக சபையை அமைப்பதற்கு சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள கோரிக்கையை அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சி சார்பில் கட்சியின் தலைவர் மௌலவி. முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் மேற்படி கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு கிழக்கிற்கான இடைக்கால நிருவாக சபை தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கையை மீள்பரிசீலனை செய்ய முன்வருவதுடன், வடக்கிற்கும், கிழக்கிற்கும் தனித்தனியான இடைக்கால நிருவாக கோரிக்கையை முன்வைப்பதே சாத்தியமான தெனவும் அவர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் சூழல் தற்போது இல்லாத பட்சத்தில் வடக்கு , கிழக்கு மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வடக்கு , கிழக்கு பிரதேசங்களிலுள்ள சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து தமக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்து நிர்வாக இடைக்கால கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது அழுத்தத்தை ஒருமித்த குரலில் கொடுக்க வேண்டுமென ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள கோரிக்கையை அவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
அமைச்சர் டக்லஸ் தேவானந்தா என்பவர், நாம் மிகவும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள, இனவாதம் இல்லாத தமிழ் தலைவர். அந்த வகையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து இடைக்கால நிர்வாகம் கேட்பதானது பிழையானதாகும்.
வடக்குக்கு வேறாகவும், கிழக்குக்கு வேறாகவும் தனித்தனியான இடைக்கால நிர்வாகத்தை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா முன் வைத்திருக்க வேண்டும். அதுதான் நிலையான தீர்வாகும்.
சந்திரிக்கா ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு வடக்கையும் கிழக்கையும் பிரித்து புலிகளிடம் இடைக்கால நிர்வாகம் கொடுக்க முயற்சி எடுத்ததும், அதனை கிழக்கு முஸ்லிம் சமூகம் கடுமையாக எதிர்த்ததையும் நாம் மறந்து விடக்கூடாது.
வடக்கில் புலிகள் தனக்கே சுதந்திரமாக அரசியல் செய்ய முடியாமல் இருந்த டக்கஸ் தேவாவுக்கு, இன்னமும் அவரை தமிழ் கூட்டமைப்பினர் ஒரு தலைவராக ஏற்காத நிலையில், வடக்கு கிழக்கு இணைந்த இடைக்கால நிர்வாகத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ முடியுமா? என கேட்கிறோம்.
ஆகவே, இது விடயத்தை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீள் பரிசீலனை செய்வதுடன், வடக்கும் கிழக்குக்கும் தனித்தனியான இடைக்கால நிர்வாக கோரிக்கையை முன் வைப்பதே சாத்தியமானதாகும் என்பதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) அவரிடம் கேட்டுக்கொள்கிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)