
posted 11th August 2022
குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா புதன்கிழமை (10) வெகுசிறப்பாக இடம்பெற்றது.
நேற்றுக் காலை விசேட அபிஷேக பூசை, காலை 8.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய முத்தெய்வங்களும் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளி முத்தேர்களிலும் எழுந்தருளினர்.
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டு அடியவர்களால் சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷம் முழங்க, வடம் தொட்டு இழுக்க முற்பகல்-11 மணியளவில் முத்தேர் பவனி ஆரம்பமானது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பல ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை எடுத்தும், பறவைக் காவடிகள் எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், கற்பூரச் சட்டிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.
முத்தேர்களும் இருப்பிடம் வந்தடைந்தமையைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.
இந்த ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலயச் சூழலில் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு அடியவர்களுக்குப் பானங்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், அன்னதான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் தேர்த் திருவிழாவில் கிராமத்தவர்கள் மாத்திரமன்றி, அயல் கிராமத்தவர்கள் மற்றும் புலம்பெயர் தேசத்தவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.
தேர்த் திருவிழாக் கிரியைகளை சிவாகம கிரியா கிரம ஜோதி சிவஸ்ரீ தி.வைத்தீஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ வை. கிருஸ்ணானந்த குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் சிறப்பாக நிகழ்த்தினர்.
இதேவேளை, இந்த ஆலய மஹோற்சவத்தில் இன்று வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும், இன்றிரவு 7.30 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)