
posted 30th August 2022
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவிகளும் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்துள்ளனர் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறு சித்தியடைந்த மாணவிகளுள் 04 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 06வது தொகுதி மாணவியர்களாவர். முன்னைய 05 தொகுதி மாணவிகளும் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்து, பெரும்பாலானோர் பல்கலைக் கழகங்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தெரிவாகியிருந்தனர்.
ஏற்கனவே இக்கல்லூரியை சேர்ந்த 15 மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இக்கல்லூரியில் அல்ஆலிம் கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன், நான்காம் வருடத்தில் அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக வெளியேறுகின்றனர்.
இதுவரை இங்கிருந்து 30 பேர் மெளலவியாக்களாக வெளியேறியுள்ளனர். இவர்களுள் பலர் பல்கலைக்கழக பட்டதாரிகள் என்பது சிறப்பம்சமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)