
posted 2nd September 2022
'பணிபெறவல்ல பணிபுரியவே வந்தேன்' என்ற இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்க பணிக் குருத்துவ வாழ்வில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்ற மன்னார் மறைமாவட்டத்தின் புனித செபஸ்தியார் பேராலயத்தின் பரிபாலகர் அருட்பணி இராயப்பு புஸ்பராஜ் அடிகளார் தனது குருத்துவ வாழ்வின் யூபிலி நன்றித் திருப்பலியை மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு ஆலயத்தில் செவ்வாய் கிழமை (30.08.2022) காலை 10.30 மணியளவில் ஒப்புக்கொடுத்தார்.
இந் நன்றித் திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயரும் முன்னாள் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க ஆயருமான மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மற்றும் வெளி மறைமாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த அதிகமான குருக்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் இவர் பங்காற்றிய பங்குதலங்களின் பிரதிநிதிகள், இவரின் உறவினர்கள், மற்றும் அழைக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் இவரால் ஒப்புக்கொடுக்கப்பட்ட நன்றித் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
ஆடம்பரங்கள் புகழ்ச்சிகளை விரும்பாத அருட்பணி இராயப்பு அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளார் நீதி நியாயத்தில் கண்ணியமானவர் என்றும் ஆழமான அர்ப்பணமுள்ளவர் என்றும் துன்பங்களை இனிதே சுமந்து மற்றவர்களின் சுமைக் குறைக்கும் மனம் கொண்டவர் என்றும், எதையும் எப்பொழுதும் இறைவனுக்காக செய்ய முனைபவர் என்றும், மதங்கள் கடந்த மனித நேயம் கொண்டவராக திகழ்பவராகவும், எதற்கும் துணிந்து அடக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுப்பவர் என பலராலும் இவர் போற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)