அமைதிகாத்த தவிசாளருக்கு கண்டனத்துடன் மகஜரும் கையளிப்பு

மன்னார் பிரதேச சபை தனது எல்லைகளுக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் இல்மன்னைற் மணல் அகழ்விற்க்கும், காற்றாலை அமைப்பதற்கும் எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கண்மூடித்தனமாக இருந்து வருவதையிட்டுக் கண்டிக்கின்றோம் என மக்கள் மகஜர் மூலம் மன்னார் பிரதேச சபை தவிசாளரை கண்டித்துள்ளனர்.

இவ்வாறான அசட்டைத்தனமான செயல்பாட்டுக்கு எதிரான கண்டன ஊர்வலமும், மகஜர் கையளிப்பும் புதன்கிழமை (24.08.2022) பேசாலையில் இடம்பெற்றது.

இதன்போது வழங்கப்பட்ட தவிசாளருக்கான கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது;

பாதிக்கப்பட்ட பூர்வீகிய கிராமங்களான தலைமன்னார் கிராமம் , தலைமன்னார் பியர் , தலைமன்னார் ஸ்ரேசன் , கட்டுக்காரன் குடியிருப்பு , பருத்திப்பண்ணை, கீழியன்குடியிருப்பு , நடுக்குடா . பாவிலுப்பட்டான் குடியிருப்பு , துள்ளுக்குடியிருப்பு, பேசாலை, முருகன் கோவில், காட்டாஸ்பத்திரி மற்றும் சிறுத்தோப்பு இவை அனைத்தும் இணைந்து மொத்தத்தில் மன்னார் தீவையே பாரிய விளைவுகளுக்கு இட்டுச்செல்ல காரணமாக இருப்பனவாக பாரிய மணல் அகழ்வு, காற்றாலைகள் என்பனவாகும்.

இம் மணல் அகழ்வானது 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்றுதொட்டு இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மன்னார் பிரதேச சபையினால் எடுக்கப்படவில்லை.

மன்னார் பிரதேச சபையானது இந்த விடயத்தில் கண் மூடித்தனமாக இருந்து வருவது மனவருத்தத்துக்குரியது.

தனி நபர் ஒருவர் ஜிஎஸ்எம்பி உதவியுடன் தனது வேலைத் திட்டத்தை ஆரம்பித்தது தெரிந்திருந்தும், பொறுப்பதிகாரி என்ற வகையிலேயே மக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளாக இருந்தும் நீங்கள் பாராமுகமாக இருந்துள்ளீர்கள்.

இதை தடுக்க வேண்டிய முழுப்பொறுப்பு பிரதேச சபையாகிய தங்களிடம் இருந்தபோதும், பிரதேச செயலாளருக்கு அறிவித்து இவற்றை தடுக்காததும், கண்மூடித்தனமாகவும், அசட்டையாகவும் இருந்துள்ளீர்கள்.

மன்னார் தீவுப்பகுதின் அதிகமான நிலப்பரப்புக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. எங்கள் மீன்பிடிகள் நாசமாக்கப்படுகின்றன. மாணவர்களின் கல்வி ஏலவே பாதிப்டைந்துள்ள நிலையில் தற்பொழுதும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

இத்துடன் மக்கள் சுகாதார ரீதியிலும் பாதிப்புக்களை எதிர் நோக்குகின்றனர். கர்ப்பிணிமார்களின் பாதிப்பு உச்சநிலை அடைந்து வருகின்றது.

இப்பொழுது வெள்ள அனர்த்தமும், தொற்று நோயும் பரவுகின்றன. பாரிய மணல் அகழ்வுக்கும் காற்றாலைகள் அமைப்பதற்கும் சிறு சிறு சலுகைகள் மற்றும் லஞ்சம் பெறுவதனால் இது திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கு சாதகமாக அமைகின்றது.

எதாவது திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது இவைகள் மக்களுக்கு நன்மையா தீமையா என்று அறிவு சார்ந்த, அனுபவம் சார்ந்தவர்களுடன் கலந்தாலோசிப்பதுடன் இவைகள் மக்களுக்கு தெரியப்படுத்துவது ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களின் கடமையாகும்.

எதிர்வரும் காலங்களில் அழிவுக்குள்ளாகும் திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்ற போது பிரதேச சபை தாங்களே எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இதனால் மக்களின் வாழ்வு சீரழிந்து போகுமாகில் அதற்கு பிரதேச சபையே முழுப் பொறுப்பை எடுக்க வேண்டும்.

மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு பிரதேச சபை உடந்தையாக செல்லக்கூடாது என பேசாலையில் இடம்பெற்ற கண்டன பேரணியின்போது மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கான மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைதிகாத்த தவிசாளருக்கு கண்டனத்துடன் மகஜரும் கையளிப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More