
posted 17th August 2022
தமிழ் மக்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தும் முகமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது சாத்வீகமான ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவை ஆவணி மாதம் முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் புதன்கிழமை (17.08.2022) 17வது நாள் இலுப்பைக்கடவை பகுதியில் இடம்பெற்றது.
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் நூறு (100) நாட்கள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் இச் செயல் திட்டமானது இலுப்பைக்கடவையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றது.
குறித்த இந் நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ , மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ். திலீபன் மற்றும் கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் , என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு கெளவரவமான அரசியல் தீர்வை பெறவதற்கான தெளிவுபடுத்தல்கள் இடம்பெற்றதுடன் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டது.
குறித்த இந் நிகழ்வானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)