
posted 1st September 2022
சமுர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள கல்விப் பொதுத் தராதர சாதரண தரம் சித்தியடைந்து உயர்தரக் கல்வியை தொடர்கின்ற மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்காக சமுர்த்தி 'சிப்தொர' புலமைப்பரிசில் மன்னார் மாவட்டத்தில் 761 மாணவர்கள் நன்மை பெறுகின்றனர்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மாணவர்களுக்கான சமுர்த்தி 'சிப்தொர' புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் தலைமையில் வியாழக்கிழமை (01.09.2022) மன்னார் நகர மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட செயலாளருமான திருமதி ஸ்ரான்லி டி மெல் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொடுப்பனவு சான்று பத்திரங்களையும், காசோலையினையும் வழங்கினார்.
சமுர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள கல்விப் பொதுத் தராதர சாதரண தரம் சித்தியடைந்து 2021-2023 கல்வியாண்டில் உயர்தரக் கல்வியை தொடர்கின்ற மாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக்காக குறித்த சமுர்த்தி 'சிப்தொர' புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்திலிருந்து 761 மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் ஜனாப் அலியார் திட்டமிடல் பணிப்பாளர் க. மகேந்திரன் உட்பட பிரதம கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பாடசாலைகளின் அதிபர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)