
posted 9th August 2022
இம்மாத (ஆவணி) மருதமடுத் திருநாளுக்கு பக்தர்கள் தற்பொழுது வந்த வண்ணம் உள்ளனர். நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இவ் விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது என இது தொடர்பாக நடைபெற்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் (ஆவணி மாதம்) 15ந் திகதி (15.08.2022) நடைபெற இருக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் முக்கிய யாத்திகர் ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னையின் திருநாளுக்கு மடு பரிபாலகர் கேட்போர் கூடத்தில் முன்னெடுக்க்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
செவ்வாய் கிழமை (09.08.2022) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடுக் கோவில் பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், குரு முதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் மற்றும் இது தொடர்பான திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இப் பெருநாளுக்கு குறைந்தது சுமார் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இவ் விழாவை முன்னிட்டு ஏற்கனவே மடுத் திருதத்தலத்திலுள்ள 350 வீடுகளும் பக்தர்களால் முன் கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மடுத்திருப்பதிக்கு வந்து சுமார் 450 க்கு மேற்பட்ட கூடாரங்கள் அமைத்து தங்கியருந்து கொண்டு நவநாட்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டு வருவதாகவும், எதிர்வரும் 11 ந் திகதிக்குப் பின் பெருந்தொகையான பக்தர்கள் வருகை தரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.
வருகை தருபவர்களுக்கான ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்தாகவும் மற்றைய வசதிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாகவும், மற்றும் மடு ஆலயப் பகுதிக்குள் ஒழுக்க சீர்கேடுகள், திருட்டுக்கள் ஏற்படா வண்ணம் 300 க்கு மேற்பட்ட பொலிசார், இராணுவ உதவிகளுடன் பலத்த பாதுகாப்புக்கள் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இவ் விழா தொடர்பாக ஆரம்பக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சகல நடவடிக்கைகளும் திருப்திகரமாக இடம் பெற்றுள்ளதாகவும் மடு பரிபாலகரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)