மன்னார் தீவைப் பாதுகாக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பனிகளினால் மன்னார் தீவின் பெரும்பாலான பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள கனியவள மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின்திட்டங்களிலிருந்து எமது மன்னார் தீவினை பேரழிவிலிருந்து பாதுகாக்குமாறு மிகவும் மன்றாட்டமாக வேண்டி நிற்கின்றோம் என மன்னார் வாழ் மக்கள் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் இங்குள்ள ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஜனாதிபதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஊடாக மகஜர் அனுப்பப்பட்டு;ளளது.

மன்னார் தீவில் இல்மனைட் மணல் அகழ்வு மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள காற்றாலை மின் திட்டங்களுக்கு எதிராக திங்கள் கிழமை (29.08.2022) மன்னார் நகரில் மன்னார் தீவிலுள்ள மக்கள் பல நூற்றுக் கணக்கானோர் பல அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இப் போராட்டத்தின்போது மன்னார் மாவட்ட செயலகத்துக்கு படையெடுத்துச் சென்ற மக்கள் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பதற்காக இரு சிறுவர்கள் மன்னார் அரசாங்க அதிபரிடம் இம் மகஜரை கையளித்தனர்.

இம் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மன்னார் பிரஜைகள் குழுவுடன் இணைந்து சமய, தொழில்முறை, சிவில் அமைப்புக்கள், மீன்பிடி மற்றும் விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் தீவிர அக்கறையுள்ளவர்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பனிகளினால் மன்னார் தீவின் பெரும்பாலான பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள கனியவள மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் திட்டங்களிலிருந்து எமது மன்னார் தீவினை பேரழிவிலிருந்து பாதுகாக்குமாறு மிகவும் மன்றாட்டமாக வேண்டி நிற்கின்றோம்.

ஏலவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தம்பப்பண்ணி காற்றாலை மின் திட்டத்தின் விளைவாக சமூக வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டுள்ள மன்னார் தீவில் வசித்துவருகின்ற மக்களாகிய எமக்கும், மன்னார் குடாவின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புக்கும் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை கருத்தில் கொள்ளாமல், மேலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் வண்ணம் அதானி குழுமம் காற்றாலை விசையாழிகளை நிறுவும் பட்சத்தில் மேலும் பல எதிர்மறையான அழிவுகளை நாம் சந்திக்கவேண்டிய மிகவும் துர்ப்பாக்கியமான நிலைமைகளுக்கு உள்ளாவோம் என்பதனை தங்களது மேலான அவதானத்திற்கு தயவுடன் அறியத்தருகின்றோம்.

ரைற்றானியம் சான்ட் நிறுவனம் என்ற ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட நிறுவனமும், இலங்கையிலுள்ள அதன் துணை நிறுவனங்களும், உலகளவில் விரும்பப்படும் மூலப்பொருளான டைட்டானியம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கனரக உலோகங்களை, முதன்மையானதாக காணப்படுகின்ற பாரியளவிலான இல்மனைட் மணலை மன்னார் தீவிலிருந்து அகழ்வதை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

மேற்படி அகழ்விற்காக இவர்களினால் ஒதுக்கப்பட்ட பரப்பளவு 204 ச. கி.மீ. ஆகும். ஆயினும் மன்னார் தீவின் மொத்த பரப்பளவு 140 சதுர கிலோமீட்டர் மட்டுமே என்பதால், தீவினை அண்டிய கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ரிஎஸ்எல் இதை 50 வருட திட்டமாக கருதுகிறது. கட்டத்தை நிறைவு செய்துள்ளது. தற்போது தொழில்துறை சுரங்க உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளது.

மன்னார் தீவில் வசித்துவருகின்ற குடிமக்களாகிய நாம் இதனை முன்னெடுத்துச் செல்வதை நிறுத்துவதற்கான தங்களது ஒத்துழைப்பினை கோரி நிற்கின்றோம். ஏப்ரல் 2021 இல் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சட்ட திட்டங்களை மீறிய காரணத்தினால் கடந்த ஏப்ரல் 2021ல் ரிஎஸ்எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட் அனைத்து ஆய்வு உரிமங்களும் இரத்து செய்யப்பட்டது

ஆயினும், அனைத்து உரிமங்களும் கடந்த 2021 நவம்பர் மாதம் மர்மமான முறையில் மீண்டும் வழங்கப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மன்னார் குடிமக்கள் குழு பலமுறை கோரிக்கை விடுத்தும் எங்களுக்கு எந்த தகவலும்.வழங்கப்படவில்லை.

முன்மொழியப்பட்ட அகழ்வு மற்றும் சுரங்க நடவடிக்கை ஒரு மணல் தீவில் 12 மீட்டர் ஆழத்திற்கு தீவு முழுவதும் கடல் நீர் ஊடுருவி தீவின் முக்கிய வாழ்வாதாரமான மீன்பிடி மற்றும் விவசாயத்தின் அழிவைக் குறிக்கிறது. தற்போது மன்னார் தீவில் 12,000 குடும்பங்கள் மீன்பிடி தொழிலையே பிரதான வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர்.

ஏற்கனவே மன்னார் தீவின் 63 வீதமான பகுதி கடல் மட்டத்திற்கு கீழேயே உள்ளது. விஞ்ஞான ரீதியில் முன்மொழியப்பட்ட மண் அகழ்வானது மன்னார் தீவில் உயிர் வாழக்கூடிய நன்னீர் நீர்நிலையை அழித்துவிடும். மண் அகழ்வானது கடலின் ஹைட்ராலிக் அழுத்தத்தை நன்னீர் நீர்த்தேக்கத்தின் பலவீனமான சக்திக்கு எதிராக தள்ளும் உப்பு நீரின் ஊடுருவல் நன்நீர் விநியோகத்தை மாசுபடுத்த அனுமதிக்கிறது. இதன் விளைவாக தாவர உயிர்கள் இறக்கத் தொடங்கும். அதைத் தொடர்ந்து விலங்குகள் மற்றும் இறுதியாக மனிதர்கள் அதாவது மன்னார் தீவில் வசிக்கும் மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு வாழத் தகுதியற்றதாக மாறும்.

பருவநிலை மாற்றத்தின் விளைவாக கடல் மட்டம் உயருவதால் இது மோசமாகும். காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல் சமநிலை மேலும் பாதிக்கப்படும்.

இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. கனரக உலோகங்கள் விற்பனை மற்றும் காற்றாலை, ஆற்றலை உற்பத்தி செய்வதன் மூலம் வெளிப்படையான 'விரைவில் பணக்காரர்' என்ற வாய்ப்பைக் கைப்பற்றுவதற்கான தூண்டுதல் ஒரு பொருளாதார உயிர்நாடியாக கவர்ச்சியூட்டுவதாகத் தோன்றலாம்.

ஆனால், மன்னார் குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் இருப்பை அச்சுறுத்தும் பேரழிவை ஏற்படுத்துகிறது. 'இந்த சர்வதேச நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்கு வந்து நாட்டிற்கு அடிப்படையாக வேர்க் கடலையைக் கொடுக்கும் மூலப்பொருளைப் பிரித்தெடுக்கின்றன. மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சம்பத் செனவிரத்ன எச்சரிக்கிறார்.

சுருக்கமாக எதிர்மறையான தாக்கங்கள் பற்றிக் கூறுகையில்;

  • மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு கடல் நீர் ஊடுருவலால் நன்நீர் இழப்பு.
  • கடல் அரிப்பு மற்றும் வாழக்கூடிய நிலம் இழப்பு

  • விவசாயம், மீன்பிடி மற்றும் பனைவளம் சார்ந்த தொழில் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் மற்றும் தினக்கூலியாளர்களுக்கு இழப்பு.

  • நில அபகரிப்பு ஏழைகள் மற்றும் அவர்களின் எதிர்கால நிலைத் தன்மையை எதிர்மறையாக பாதிக்கும்.

  • மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் புலம்பெயர் பறவைகள் உள்ளிட்ட வன உயிரினங்களின் அழிவு

  • ஒலி, மாசுபாடு குழந்தைகளின் கல்வி உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கிறது.

மன்னார் ஏற்கனவே மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் மற்றும் பரந்த வறுமையின் குடிமக்களால் அதிர்ச்சியடைந்துள்ளது. பாரியளவிலான கனியவள மண் அகழ்வு மற்றும் கூடுதல் காற்றாலைகள் இதற்கு முன் அனுபவிக்காத பேரழிவை ஏற்படுத்தும்.

எனவே மன்னார் தீவை என்றென்றும் அழித்து இந்த தனித்துவமிக்கதும், பல நூறு வருட வரலாற்றினைக் கொண்டதுமான எமது மன்னார் தீவினை உடையக் கூடிய மற்றும் அடர்த்தியான சனத்தொகைத் தீவை அழித்துவிடும் எந்தவொரு உடனடி மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்தும் மன்னார் தீவைப் பாதுகாக்குமாறு நாங்கள் எங்கள் ஜனாதிபதியாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மன்னாரை தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்காக காப்பாற்றிய நீண்ட கால நோக்கு கொண்ட ஜனாதிபதியாக உங்களது மரபு உறுதிப்படுத்தப்பட்டு நினைவுகூரப்படும் என்பது எமது நம்பிக்கை என மன்னார் பிரஜைகள் குழு தலைவர், மதம் சார் பிரதிநிதி, மன்னார் மீனவர்கள் சங்கம் தலைவர், பிரிஜின் லங்கா நிர்வாக தலைவர், மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் இணைப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தலைவர், மன்னார் வியாபாரிகள் சங்கம் தலைவர், மன்னார் வர்த்தக சங்கம் தலைவர், மன்னார் மாற்றாற்றல் புணர்வாழ்வு சங்கம் இயக்குநர் ஆகியோர் கையொப்பம் இட்டே இம் மகஜரை அனுப்பி வைத்துள்ளனர்.

மன்னார் தீவைப் பாதுகாக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)