
posted 18th August 2022
நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவள்ளுவர் விழாவை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா செவ்வாய்க்கிழமை (16.08.2022) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்
அத்துடன் மாவட்ட பிரதேச திணைக்களத்தலைவர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் விழாவின் ஆரம்ப நிகழ்வாக திருவள்ளுவர் சிலைக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் அவர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக திருவள்ளுவர் சிலை ஊர்வலமாக இந் நிகழ்வு இடம்பெற்ற மன்னார் மாவட்ட செயலக பிராத்தனை மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள்;
திருக்குறள் நடனம் , சிறப்பு சொற்பொழிவு , குறள் வழி நாடகம் , திருவள்ளுவர் புகழ் பாடும் கோலாட்டம் , சிறப்புக் கவியரங்கம் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றதோடு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற கலை இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)