
posted 31st August 2022
செவ்வாய் கிழமை (30.08.2022) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதியில் குறிப்பாக மன்னாரிலும் இத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையமும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கமும் இணைந்து இத் தினத்தை அனுஷ்டித்த போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நூற்றுக் கணக்கான உறவினர்கள் இதில் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களின் நிழல் படங்களை தங்கள் கைகளில் ஏந்தியவாறு வீதிகளில் பேரணியாக சென்றதுடன், பஸ் நிலையம் அருகாமையில் தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
இப் போராட்டத்தில், 'உரிய நீதிக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்' என்று இந் நினைவு தினத்தில் இவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இலங்கையின் போரியல் வரலாற்றில் நீண்ட கால யுக்தியாக வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையின் அரச படைகளால் மட்டுமல்லாது, பல்வேறு ஆயுத குழுக்களாலும், பல்வேறு தரப்புக்களாலும் இடம் பெற்றுள்ளமை பல தசாப்தங்களாக இடம்பெறும் மனித உரிமை மீறலாக கருதப்பட்டு வந்தாலும், இன்றும் பல்வேறு கடத்தல் சம்பவங்கள் பதிவாகின்றமை சமூகத்தில் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்பதை வலியுருத்தி கூறுகின்றது.
இறுதி யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களிலும், பின்னரான காலங்களிலும், வெள்ளை வான் கடத்தல், இரானுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், அரச படைகளினால் கடத்தப்பட்டவர்கள், வயது வித்தியாசம் இன்றி இலங்கை அரச தரப்பு படைகளால் கைது செய்யபட்டவர்கள் என இப் பட்டியல் நீண்டு போவதை நாம் பார்க்கின்றோம்.
இலங்கையின் போர்ச் சூழல் ஆரம்ப கால பகுதியில் இருந்து மனித கடத்தல் அல்லது வலிந்து காணாமல் போகச் செய்தல் எனும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இன்றும் உறவுகளை தொலைத்துவிட்டு வீதிகளிலும் வீதியோரங்களிலும் கொட்டகைகள் அமைத்து வயோதிபத் தாய்மார்களாகிய நாங்கள், எங்கள் பிள்ளைகளுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் கண்ணீரோடு தெருத்தெருவாக தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்காக மழையிலும், வெயிலும் சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு மத்தியிலும் உன்னதமான, உயிரோட்டமானதொரு போராட்டம் வடக்கு கிழக்கு தமிழர் வாழுகின்ற பகுதிகளில் மக்கள் மயப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கம் இதுவரை நியாயமான ஒரு பொறிமுறையினை முன்வைக்கவில்லை.
இங்கே பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்கள் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையினை நோக்கியதாகவே அமைந்திருக்கின்றது.
இலங்கையிலே நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றங்கள் சர்வதேச ரீதியல் விசாரிக்கப்பட வேண்டும் என்ற எங்களின் அங்கலாய்ப்புக்கு பூகோள அரசியல் இடம் தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற கடந்த அரசாங்கத்தில் கூட சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைத்தனங்களும் அல்லது நீதியான விசாரணைகளுக்கான எந்த முன்னெடுப்புக்களும் இதுவரை எட்டப்படவில்லை என்பது ஆணித்தரமான உண்மை.
2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்நாட்களில் இருந்து இற்றைவரை 115க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தேடிய நியாயமான தேடலில் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டு மரணத்துள்ளனர். இவர்களது மரணம் சாதாரணமல்ல. மாறாக, வலிகளைச் சுமந்த சாட்சியங்கள்.
இந்த இறப்புக்களின் மூலம் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது மனித நேயம். தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்ற நிலைக்கே வரவேண்டியுள்ளது. இன்று சமூகத்தில் உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் மிகவும் பாதிக்கப்படும் ஒருதரப்பாகவும் இந்த குறிப்பாக கணவர் காணாமலாக்கப்பட்டு பிள்ளைகளுடன் வாழும் இளம் தாய்மார்களின் இன்றை நிலை.
பெண் தலைமைக் குடும்பங்களாக சொல்லமுடியாத துயரங்களை சுமந்து, வாழ்ந்து தங்களின் உறவுகளுக்காக தொடர்ந்தும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்ற அம்மாக்களின் நிலையினை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
எங்களுடைய உறவுகளை தேடிய போராட்டத்தில் பொதுமக்களும் பங்குதாரராக மாறவேண்டும். இந்த காணாமல் ஆக்கப்படும் சந்தர்பங்கள் தனி குடும்பங்களுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் அல்ல. மாறாக, இது யுத்தத்தின் ஒரு வகை தந்திரோபாய செயற்பாடாகவே கருதுகின்றோம்.
இறந்துபோனவர்களுக்கு ஒரு நினைவேந்தல் செய்வதன் மூலம் உளவியல் ரீதியாக ஆறுதல் கிடைக்கும். ஆனால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? என தெரியாது உண்மை நிலையை கண்டறிவதற்கான அம்மாக்களாகிய எங்கள் போராட்டத்தில் இன்று அப்பாவின் முகங்களை மறந்த சின்னஞ் சிறார்களும் கடைசி காலத்தில் செய்யவேண்டிய கடமைகளை கூட செய்வதற்கு பிள்ளைகளின்றி வாழும் பெற்றோர்கள் என நீண்டு கொண்டே போகும் வலிகளின் கதைகளை சொல்லிக் கொண்டே போகலாம் .
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் செய்யும் அறவழி போராட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் உதவியுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இவர்களுக்கான நீதி பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை இவர்களுக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் தமது முழுமையான ஒத்துழைப்புக்கள் இருக்கும் என்பதை கூறிநிற்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)