
posted 30th August 2022
கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களில் இரவு நேரங்களில் அதிகரித்துள்ள யானைகளின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மின்னொளி வசதிகளை அதிகரிப்பதற்கு கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.
கல்முனை மாநகர சபையின் 53ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு திங்கட்கிழமை (29) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபை உறுப்பினர் சீ.எம். முபீத் விடுத்த கோரிக்கையையடுத்து, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் இப்பிரச்சினையை பிரஸ்தாபித்து உரையாற்றுகையில், இரவு நேரங்களில் நற்பிட்டிமுனை பிரதேசத்தினுள் காட்டு யானைகள் பட்டி பட்டியாக திரண்டு வந்து, விவசாய நிலங்களையும், பொது மக்களின் உடைமைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. ஊருக்குள் அத்துமீறி நுழையும் யானைகளினால் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.
யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்காக இப்பிரதேசத்தில் விசேடமாக மின்னொளி வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்காக வெளிச்சம் கூடிய மின்குமிழ்கள் அவசரமாக பொருத்தப்பட வேண்டும். அத்துடன் யானைகளை துரத்துவதற்காக பட்டாசுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து குறித்த பிரதேசத்தில் மேலதிக மின்குமிழ்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை, கல்முனை அஹமட் பஸாருக்கு பின்னாலுள்ள பகுதியிலும் யானைகள் ஊடுருவுவதாக சுட்டிக்காட்டிய மாநகர சபை உறுப்பினர் எம். சிவலிங்கம், இப்பகுதியையும் வெளிச்சமூட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து குறித்த நடவடிக்கையின் போது இப்பகுதியையும் உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)