யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் வழங்கும் பணி இன்று ஆரம்பம்
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் வழங்கும் பணி இன்று ஆரம்பம்

முதல் அலகு தடுப்பூசி அட்டை

யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியின் முதலாவது அலகைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது அலகை வழங்கும் பணி இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் க. நந்தகுமாரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடமாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 3ஆம் கட்டத்தின் முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடைபெற்று வந்தன. அவ்வாறு தமது முதலாவது அலகு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது அலகு தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளன.

18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்பு வழங்கப்பட்டதன் படியே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் இத்தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசி ஏற்றப்படும் தினம் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறியத்தரப்படும்.

மேலும் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் இரண்டாவது அலகு தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் அலகு தடுப்பூசி பெற்றுக் கொண்டமையை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு முதல் தடவை வழங்கப்பட்டதைப் போன்றே அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தடுப்பூசியானது இந்தத் திட்டத்தின் இறுதி நாள்களில் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும்.

யாழ்.மாவட்டத்தில் சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதை போன்றே செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி, 11 ஆம் திகதி சனிக்கிழமைகளில் இரண்டாவது அலகு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் வழங்கும் பணி இன்று ஆரம்பம்

எஸ் தில்லைநாதன்