
posted 18th August 2021

இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளரான ஊடக வித்தகர் கலாபூசணம் முபீதா உஸ்மான் தனது 74ஆவது வயதில் காலமானார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (17) திடீரெனெ நோய்வாய்ப்பட்ட இவர் சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் இரவு மரணமடைந்துள்ளார். அன்டிஜன் பரிசோதனையின்போது இவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கொழும்பை பிறப்பிடமாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட முபீதா உஸ்மான் கடந்த 55 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ள இவர் தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக பணியாற்றியிருப்பதுடன் பின்னர் அரசாங்க தகவல் தினைக்களத்தில் பிரச்சார உத்தியோகத்தராகவும் பத்திரிகை தொடர்பு உத்தியோகத்தராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
2001- 2004 காலப்பகுதியில் அரசு- புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமாதான செயலகத்தின் அம்பாறை பிராந்திய பணிப்பாளராகவும் இவர் சிறப்பாக கடமையாற்றியுள்ளார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றில் திட்ட இணைப்பாளராக கடமையாற்றி, அம்பாறை மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார மற்றும் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முன்னின்று உழைத்துள்ளார்.
கலை, இலக்கிய மற்றும் ஊடகத்துறை பணிகளுக்காக கடந்த 2008ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாபூசணம் விருதையும் ஊடகத்துறை சேவைக்காக கடந்த 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடக வித்தகர் எனும் முதலமைச்சர் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.
அத்துடன் சமூக சேவைகளை மையப்படுத்தி 2012 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த முதல் பெண்ணாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையிலும் இவர் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், கலை, இலக்கிய, ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக கடந்த 2020ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் இவர் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இவ்வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.ரி.என். மற்றும் எம்.ரி.வி. தொலைகாட்சி நிறுவனங்களினால் ஆளுமைப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிலோன் முஸ்லிம் கவுன்சில், மன்சூர் பவுண்டேஷன், மருதம் கலைக்கூடல் மன்றம், கலைச்சுடர் ஷக்காப் மௌலானா பவுண்டேஷன் போன்ற சிவில் சமூக, கல்வி, கலாசார அமைப்புகளினாலும் இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தனது குடும்ப சுமைக்கு மத்தியிலும் சமூகத்தில் குடும்பப் பெண்கள் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் இதர பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் பெண் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளிலும் கூடிய கவனம் செலுத்தி, அவர்களை முன்னிலைக்குக் கொண்டு வருவதில் இவர் அயராது உழைத்து வந்துள்ளார்.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி, இனங்களிடையே நல்லுறவு, ஐக்கியம் மற்றும் சுகவாழ்வை ஏற்படுத்தும் விடயங்களிலும் மக்களுக்கான நலன்சார் சேவைகளை பெற்றுக் கொடுப்பதிலும் பெரும் பங்காற்றி வந்துள்ளார்.
எப்போதும் எவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவதிலும் அவர்களது எந்த விடயமாயினும், அவற்றுக்கு முன்னின்று உதவுவதிலும் சாமர்த்தியமாகத் திகழ்ந்த ஊடக வித்தகர்- கலாபூசணம் முபீதா உஸ்மான் அவர்கள், ஒரு முன்னுதாரணமிக்க பெண்ணாக வாழ்ந்து, வழிகாட்டிச் சென்றுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்