
posted 25th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஹர்த்தாலுக்கு மன்னாரில் பூரண ஆதரவு
மண்ணையும், மரபுரிமையையும் பாதகாப்பதற்காக வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை (25) பொது நிர்வாக இயல்பு நிலை முடக்கல் போராட்டத்திற்கு தேசிய தளத்திலுள்ள ஏழு அரசியல் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார் ஹர்த்தால் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மன்னார் மாவட்டம் முழு ஆதரவையும் வழங்கியிருந்தது.
அந்த வகையில் மாவட்ட வர்த்தக சங்கங்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் பொதுமக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டத்திலுள்ள சகல இடங்களிலும் ஹர்த்தாலுக்கு முழு ஆதரவை வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும்,
மத ஸ்தலங்கள் தாக்கப் படுகின்றமை, தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும், செவ்வாய் கிழமை (25) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே மன்னாரிலும் இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன. தனியார் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டிருந்தது.பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டன. அதிகமான இடங்களில் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை, அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)