
posted 21st April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பெரும் கல்விமான் பேராசிரியர் சந்திரசேகரம்
“தாம் பெற்ற கல்வியின் பெறுமதியை தமது இறுதிக்காலம் வரையிலும், தன் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பகிர்ந்து கொண்டவராக மறைந்த பேராசிரியர் அமரர் சந்திரசேகரம் திகழ்ந்தார். இந்த நாட்டில் வாழ்ந்த பெரும் கல்விமான் அவராவார்.”
இவ்வாறு மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் நினைவையொட்டிய நினைவுப் பேருரையாற்றிய, தாருஸ்ஸலாமிலுள்ள புறூணை பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம் என்பவற்றின் ஓய்வு நிலைப் பேராசிரியர் பீ.ஏ.ஹுசைன்மியா கூறினார்.
மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஞாபகர்த்த மன்றத்தின் ஏற்பாட்டிலும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையுடனும், நினைவுப் பேருரை நிகழ்வு ஒன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் “இலங்கையில் உயர்கல்வி ஒரு வரலாற்று நோக்கு” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றுகையிலேயே பேராசிரியர் ஹுசைன்மியா மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு பேராசிரியர் சே. சந்திரசேகரம் ஞாபகர்த்த மன்றத்தலைவர் பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில் நடைபெற்றதுடன், ஞாபகர்த்த மன்றக் காப்பாளர் பேராசிரியர் மா. கருணாநிதி நிகழ்வில் பேருரையாளர் பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா பற்றிய அறிமுக உரையையும், மன்ற செயலாளர் பேராசிரியர் ச. இந்திரகுமார் நன்றி உரையையும் ஆற்றினர்.
பேராசிரியர் ஹுசைன்மியா நினைவுப் பேருரையில் மேலும் பின்வருமாறு கூறினார்.
அமரர் சந்திரசேகரத்தை பற்றி நான் அவருடன் ஏறத்தாழ 60 வருடங்கள் கொண்ட நிகழ்வுகளை நினைத்து பார்க்க விரும்புகிறேன். சந்திரசேகரத்தை நான் முதன்முதலாக்க்கண்டது 1964 இலாகும். பேராதனை பல்கலைக்கழகத்துக்கு நுழைந்த இரண்டாவது நாளில் பகிடிவதை என சொல்லப்படும் அந்த முதல் வாரத்திலேயே அவர் எனக்கு வதை கொடுக்காமலேயே நண்பராகிவிட்டார்.
என்னை பொறுத்தமட்டில் சந்திரசேகரம் ஒரு வாழ்நாள் ஆப்த நண்பராக மட்டுமில்லாமல் இந்த நாட்டிலே வாழ்ந்த ஒரு பெரிய கல்விமான் என்றுதான் நான் சொல்வேன். அவர் சாதாரணமாக கல்விமாணி பட்டப்படிப்பிலே உயர்தரமாக சித்தி பெற்றவர் என்பது மட்டுமல்ல, அந்த கல்வியின் பெறுமதியை தனது இறுதிக் காலம் வரையில் தனது சமூகத்துக்கும், தனது நாட்டுக்கும் பகிர்ந்து கொண்ட மலை நாட்டிலே பிறந்து வளர்ந்த அரிய அறிஞர்களில் அவர் முதல்நிலை வகிக்கிறார். அவருடைய சமூகத்தினாலும், இலங்கை அரசாங்கத்தினாலும் பலவிதங்களில் அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். இது வாஸ்தவமான ஒரு காரியம் தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டிலே கல்விமான் என்ற முறையிலே வகிக்க கூடிய பல பதவிகளை ஏற்று மிக சிறந்த முறையில் செயலாற்றி இருக்கின்றார். அவர் 36 நூல்களுக்கும் மேலாக எழுதியவர் கல்விபற்றிய, சமூகம்பற்றிய, அரசியல் பற்றிய சிந்தனைகளை பொதுமக்களிடமும் பகிர்ந்து கொள்வதற்காக நூற்றுக்கணக்கான பத்திரிகை கட்டுரைகளை அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இவருடைய சாதனைகளையும், செயல்பாடுகளையும் அவருடைய சமூகம் மறக்கவில்லை.. அவருடைய 60 ஆம் ஆண்டிலேயே ராமகிருஷ்ண மண்டபத்திலே திரண்ட மக்கள் கூட்டம் அவருக்கு வழங்கிய கௌரவம் இன்னும் மறக்கப்பட முடியாது.
நான் புறூணை பல்கலைக்கழகத்தில் 28 ஆண்டுகள் கழிந்து இலங்கைக்கு வந்த பொழுது நாள் தவறாமல் சந்திரசேகரமும் நானும் டெலிபோனில் கதைத்துக் கொள்வது உண்டு. இடைக்கிடை நேரில் சந்திப்பதும் உண்டு.
இந்த காலகட்டத்திலே என்னை மீண்டும் எனது சமூகத்துக்கும் தமிழ் பேசும் உலகுக்கும் அறிமுகம் செய்வதில் அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். அவரின் சிபாரிசிலே நான் பல வானொலி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளேன்.
இருக்கும் வரையிலே சந்திரசேகர்த்தின் தொண்டு மறக்கப்பட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா நண்பர்களுடனும் ஒரே விதமாக பொறாமை பேதமின்றி சிரித்த முகத்துடன் ஆழ்மனதிலிருந்து உறவைப் பேணக் கூடிய ஒரு நபராக வாழ்ந்து வந்துள்ளார். இவருடன் பழகி பார்த்த பல நண்பர்கள் இதனை வற்புறுத்தி சொல்கிறார்கள். அவர் வாழ்ந்த வெள்ளவத்தை வீடு மாலை நேரம் ஆகிவிட்டால் அவரை சந்திக்க வரும் மாணவர்களுடனும் சமூக நலவாதிகளும் சேர்ந்து தினம் தினம் அவர் வீட்டிலேயே பெரும் திரளான மக்கள் கூடுவது வழக்கமாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)