
posted 4th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நிந்தவூரில் 85 வறிய விவசாய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 85 வறிய விவசாயக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிலைப்படுத்தியும், பொருளாதார மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வினால் வறிய விவசாயக் குடும்பங்கள் எதிர் நோக்கும் கஷ்ட நிலமைகளைக் கவனத்திற்கொண்டும், நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையம் ஊடாக இந்த உதவி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்குப் பொறுப்பான அம்பாறை மாவட்ட சிரேஷ்ட கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக்கின் எண்ணக் கருவிலும், பெரு முயற்சியிலும் இந்த உதவி செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் பயனாக தனவந்தர்கள், கொடையாளிகளின் நிதி உதவியுடன் குறித்த வறிய விவசாயக் குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சிரேஷ்ட கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் தலைமையில் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் (அரசாங்க அதிபர்) ஜே.எம்.ஏ. டக்ளஸ், அம்பாறை மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் சாமினி சோமதாஸ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டதுடன், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சஞ்சீவ பிரசன்ன, முன்னாள் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், மற்றும் பல முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.
இதே வேளை இந்த புனித ரமழான் மாதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், வறிய விவசாயக்குடும்பங்களைக் கவனத்திற்கொண்டும் சிரேஷ்ட கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹார்லிக் முன்னெடுத்த மேற்படி உதவிச் செயற்திதட்டத்தை நிகழ்வில் உரையாற்றிய முக்கிய அதிதிகள் விதந்து பாராட்டினர்.
நிகழ்வின் இறுதியில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)