
posted 24th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஐந்து வயோதிபர்களை கொலை செய்தவர் கைது
நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்மித்த பகுதியில் 5 வயோதிபர்களை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த 51 வயதுடைய நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தானே கொலையினை செய்ததாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்துடன் நகைகள், கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் வேறு பகுதிக்கு தப்பிச் செல்லவிருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வாக்குமூலத்தில் “அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள். சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்” என்று கைது செய்யப்பட்டவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 26 தங்கப் பவுண் நகைகள், ஆடைகள் மற்றும் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.
கொலை செய்யப்பட்டவர்களில் சிலர் பயன்படுத்திய மூன்று கையடக்கத் தொலைபேசிகள் சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் வெளிநாட்டில் தங்கியிருந்து பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும், வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்டு பணம் செலுத்த தவறியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல சேனரத்தின கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.
நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றிரவு (22) கைது செய்தனர்.
குறித்த நபர் ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.
அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேக நபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
“நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன். அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன்.
அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர். அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.
அதனால் நேற்று (22) சனி அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.
நகைகளை மட்டும் அபகரித்துச் சென்றால் பொலிஸார் எளிதில் பிடித்துவிடுவார்கள். அதனால் பொலிஸ் விசாரணையை திசை திருப்ப அனைவரையும் கொலை செய்தேன்” என்று சந்தேக நபர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப் பொருள்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர் இன்று திங்கள் (24) மாலை ஊர்காவற்றுறை நீதிவானிடம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)