
posted 1st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலங்கையில் தொழிலாளர் தினம்
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினக் கொண்டாட்டங்கள் இன்று இலங்கையிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மே தின ஊர்வலங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மே தினப் பொதுக் கூட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் பிரதானமாக கொழும்பிலும், கண்டியிலும் மே தினக் கூட்டங்கள் பெரும் எடுப்பில் நடத்திவரும் நிலையில்,
மலையக பெருந்தோட்டபகுதிகள் மற்றும் வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, களுதாவளை போன்ற பல்வேறு பிரதேசங்களிலும், மே தின ஊர்வலங்கள், மே தினக் கூட்டங்கள், மே தின கவனயீர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகோரியும், அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், கொண்டுவரவிருக்கும் பயங்காரவாத எதிர்ப்புச் சட்டம், அநீதியான வரிக்கொள்கை, அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தல், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்த கொடுபிடிகள் என்பன போன்ற பல்வேறு விடயங்களுக்க எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய (01) மே தினப் பேரணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்மைய மக்கள் போராட்டங்களைத் தடுப்பதில் பாதுகாப்புத் தரப்பினர் காட்டிய பெரும் கெடுபிடிகள் போன்று இன்றைய மேதின ஊர்வலங்களுக்குக் காட்டப்படவில்லை.
எனினும், நாடு முழுவதும் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுமூகமான சூழலிலேயே மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை சர்வதேச உழைப்பாளர் தினமான இன்றைய மே தின நிகழ்வுகள் தொழிலாளர் வர்த்தகத்திற்காகவன்றி கட்சிகளுக்குரிய தின நிகழ்வுகளாகவே அமைந்தது எனும் விமர்சனமும் கிளம்பாமலில்லை.
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஆட்சிக் கட்டிலுள்ள கட்சியினரே, தொழிலாளர் தினத்தை விமரிசையாக ஆதவாளர்களைக் கூட்டி நடந்தினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)