
posted 13th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்குறுதிகள்
மட்டக்களப்பு - வாகரை, வட்டுவானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இறால் வளர்ப்பு திட்டம், தற்போது தனியார் ஒருவரின் ஆளுமைக்குள் சென்றுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது பேச்சு வார்த்தை மூலமாகவோ ஒரு மாத காலத்தினுள் தீர்க்கப்படுமென கடற்றொழில் மற்றும் மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வட்டுவான் இறால் வளர்ப்பு திட்ட பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தலைமையில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
2004ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக கொண்டு வரப்பட்ட இறால் வளர்ப்புத் திட்டம் தெரிவு செய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதனை தற்போது தனி ஒருவர் தனது ஆளுமைக்குள் உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தபோது இந்தப் பிரச்னை தெரியவந்தது. எனவே, இது ஒரு இடியப்பச் சிக்கலாக உள்ளது. இதற்கு நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது பேச்சுவார்த்தை ஊடாகவோ ஒரு மாத காலப்பகுதியில் தீர்வு எட்டப்படும்.
மட்டக்களப்பில் மாத்திரமல்ல, இலங்கை பூராகவும் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபடுவதை தடுப்பதற்கு அந்தந்த பகுதி மீனவர் சங்கங்கள் மற்றம் கடற்படையினர், கடல் தொழில் திணைக்களம், பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்துடன், மட்டக்களப்பில் கடலில் வலையை வீசிவிட்டு, அடுத்த நாள் அதனை எடுக்க போகும் முன்னர் அதனை ஒரு குழு திருடி வருகின்றது. இது தொடர்பாக கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களம் இணைந்து ஒரு திட்டம் அமைத்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்துள்ள மீன்பிடித் திணைக்களத்தின் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை செயலிழந்துள்ளது. அதில் சமூகவிரோத செயல்கள் இடம்பெறுவதுடன், அடிக்கடி தீ மூட்டப்படுவதாக அறிந்துள்ளேன். அதற்கு 3 மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)