
posted 11th April 2022
மட்டக்களப்பு கரடியனாறு ஈரக்குளத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விதம் பலியானவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கராசா(வயது -55) எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
குறித்த நபர் பயிர்ச்செய்கை நடவடிக்கையிலும், மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருபவரெனவும், சம்பவ தினமான நேற்று முன்தினம் பால் கறப்பதற்காக தனது மாடுகளைத் தேடிச் சென்றபோது, மறைந்திருந்த யானையொன்று அவரைத் தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகப் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேசத்திற்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சடலத்தைச் சென்று பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம்
