
posted 1st April 2022
'தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கம் வெளியேறுவது சந்தோசம்' என்று சுமந்திரன் உடைய கருத்து தமிழரசுக்கட்சியின் கருத்தா அல்லது சுமந்திரனின் இந்த கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தா என்பதை சம்பந்தன் ஐயா மற்றும் மாவை அண்ணன் இதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அத்துடன் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதற்கு வெளிப்படையான பதில் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கம் வெளியேறுவது சந்தோசம் என்றும், இதையே தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் விரும்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (01.04.2022) காலையில் நடத்திய ஊடக சந்திப்பின்போது இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் வியாழக்கிழமை (31) சுமந்திரன், தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ விலகினால் சந்தோசப்படுவதாகவும் தமிழரசு கட்சியும் அதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தமாக பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன்.
ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு பின்புதான் சுமந்திரன் இந்த கூட்டமைப்புக்குள் வந்து செய்யப்பட தொடங்கி இருக்கிறார்.
கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கூட தான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பல தடவைகள் கொச்சைப்படுத்தி இருக்கிறார். அப்படி இருக்கின்றபோது விடுதலைப் புலிகளுடைய செயற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகியிருக்கின்றது.
வன்முறையின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய சுமந்திரன், புலிகள் உருவாக்கிய இந்த கூட்டமைப்பில் இவ்வாறு தொடர்ந்தும் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்க முடியும்?
இவருடைய கருத்துக்கள் தமிழர்களின் போராட்டத்தை மலினபடுத்துவதாக இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
தமிழ் இனத்துக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் எத்தனையோ உயிர்களை தியாகம் செய்த எமது இயக்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஆசைப்படும் நபர் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருப்பதற்கு அருகதை அற்றவர்.
இரண்டாவது, மாவை சேனாதிராஜா அண்ணன் அவர்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன் வெளிப்படையாக பதில் கூறவேண்டும். தமிழரசு கட்சி இதை விரும்புகிறதா? சுமந்திரன் சொன்ன கருத்தை தமிழரசுக்கட்சி ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறதா? என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் ஐயா இந்த சுமந்திரன் உடைய கூற்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதனையும் வெளிப்படையாக கூற வேண்டும்
சுமந்திரன் கூறுவதுதான் தமிழரசு கட்சி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா? என்பதனை வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும்
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு பாரிய பங்கு இருக்கிறது. இதை நாங்கள் பலமுறை சொல்லி இருக்கிறோம். அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமந்திரனுக்கு சொந்தமான அமைப்பு என்று நினைத்துக் கொண்டு, அவர் கருத்து சொல்ல முடியாது. எனவே இந்த விடயங்களுக்கு சம்பந்தன் ஐயா மாவை சேனாதிராஜா அண்ணனும் பதில் சொல்லியாக வேண்டும்.
சுமந்திரன் உடைய கருத்துதான் தமிழரசுக்கட்சியின் கருத்தா? சுமந்திரன் கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக சம்பந்தன் ஐயா ஏற்றுக் கொள்கிறாரா? இதற்கு வெளிப்படையான பதில் தரவேண்டும்.
தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி செல்வதற்கு எந்த ஒரு கட்சிக்கும், எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாங்கள் தொடர்ந்து இருப்போம். இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் எங்களுடைய பங்கு இருக்கிறது.
சுமந்திரன் அடிக்கடி எம்மைச் சாடுகின்ற போது நாங்கள் மௌனம் காத்து வந்தோம். ஏனென்றால், ஆளுக்காள் அடிபடுகின்ற நிலை ஏற்படக்கூடாது என்று பொறுமையாக இருந்தோம். ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் அவ்வாறு பொறுமை காக்க முடியாது.
தொடர்ச்சியாக எமது போராட்டத்தை மலினப்படுத்திவரும் சுமந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே செல்வது சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்வது நகைப்புக்குரிய விடயமாக இருக்கிறது.
அதைவிட சிறீ அண்ணாவையும், முப்படைகளை கொண்ட தலைவர் பிரபாகரனையும் இதில் இணைத்துப் பேசி இருக்கிறார். எமது தலைவருடைய சிந்தனைகளைக் கொண்டு நான் செயற்படுவதில் என்ன தவறு? அதேபோல், நாங்கள் ஏற்றுக்கொண்ட முப்படைகளை கட்டி ஆண்ட தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
இன்றைய நிலையில் அந்த இரண்டு தலைவர்களும் இருந்திருந்தால் என்ன முடிவை எடுப்பார்களோ அதையே இன்று எமது கட்சியும் எடுத்துள்ளது.
நாங்கள் கோட்டாவை சந்திக்க வரவில்லை என்பதற்காக சுமந்திரன் ஆத்திரப்பட கூடாது. அந்த இரண்டு தலைவர்களும் இப்பொழுது என்ன சிந்திப்பார்களோ அதன் அடிப்படையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் செயல்படும். சுமந்திரனுக்கு போராட்டத்தைப் பற்றி தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
எனவே இது விடயம் தொடர்பாக மாவை அண்ணன் அவர்களும் சம்பந்தன் ஐயாவும் எமக்கு வெளிப்படையான பதிலைத் தர வேண்டும். அதே நேரத்தில் தமிழீழ விடுதலை இயக்கமானது எந்த சூழ்நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்லாது.
மேலும் ஒரு விடயத்தை சுமந்திரன் சொல்லியிருக்கின்றார். சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களை மீண்டும் கூட்டமைப்பில் இணைய சொல்லி இருக்கின்றார். ஒற்றுமைக்கு தான் தடையில்லை என்கிறார். இப்படிச் சொல்லும் சுமந்திரன் எதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்? இது முன்னுக்குப்பின் முரணானதைக் கொண்டு சுமந்திரன் செயல்படுகிறார் என்பதை இது காட்டுகிறதல்லவா என்றார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House