
posted 7th April 2022
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ள கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலைய வளாகம் மக்கள் பாவனைக்காக கல்முனை மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆவணங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பி.எஸ்.ஜெயதிஸ்ஸ, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீபிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கணக்காளர் கே.எம். றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் எம். உதயகுமரன், உள்ளுராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம். நெளஷாத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர் ஜீ.கே.சி. கருணாரத்ன, நகர திட்டமிடல் உத்தியோகத்தர்களான எம்.எம். முஸ்தாக், வி. துஷித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் 100 நகரங்களை செழுமைமிகு நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸின் வேண்டுகோளின் பேரில் கல்முனை நகரமும் உள்வாங்கப்பட்டு, முதற்கட்டப் பணியாக பஸ் நிலைய வளாகத்தை புனரமைப்பு செய்து, அழகுபடுத்துவதற்கு சுமார் 18.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதியன்று இவ்வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக பள்ளம் படுகுழிகளுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட கல்முனை பஸ் நிலைய வளாக புனரமைப்பு வேலைத்திட்டத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு மாநகர முதல்வர் ஏ.எம். றகீப் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம்