
posted 4th April 2022
ஊரடங்கு நேரத்தில் வாள்வெட்டு
நேற்று சனிக்கிழமை மாலை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருந்த நேரம் வவுனியா நகரில் மதுபான சாலை ஒன்றின் முன்பாக வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றது. இதில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு அண்மையாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபானசாலை மூடப்பட்ட பின்னர் அவ்விடத்தில் நின்ற மூவருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன் போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டார்.
இதையடுத்து, காயமடைந்த இருவரும் அவரிடமிருந்து வாளைப் பறித்து அவரை வெட்டியதுடன், கற்களாலும் தாக்கினர். எனினும் அங்கிருந்து தப்பிய நபர் வவுனியா பொலிஸ் நிலையத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.
இதைத் தொடர்ந்து மற்றைய இரு நபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் என்றும், அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அந்தப் படகை பிடித்ததுடன், அதிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர் எனவும் கடற்படை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல் வீச்சிற்குள்ளான பஸ் வண்டி
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) பஸ் மீது அடையாளம் தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை (02) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தால் பஸ்ஸின் பின் பகுதி கண்ணாடி முற்றாக உடைந்து சேதமாகியுள்ளது.
பயணிகள் சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய