
posted 6th April 2022
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நாடு பூராகவும் சகல கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல் தேசிய நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவில் நேற்று காலை 9.48 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட செம்மலை மகா வித்தியாலயம் மற்றும் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.இதற்காக ஒரு மைதானத்துக்கு 4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் செம்மலை மகா வித்தியாலய விளையாட்டு மைதான புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க . விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த மைதான அபிவிருத்தி வேலைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதனைவிட ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் ஒரு மைதானத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக முல்லை மாவட்டத்திலுள்ள 06 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தலா ஒவ்வொரு விளையாட்டு மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் குறித்த மைதானத்தில் நிழல் தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் மதகுருக்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றன.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய