
posted 27th April 2022
தற்பொழுது நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மெசிடோ என அழைக்கப்படும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் வட பகுதிகளின் பல பாகங்களுக்கும் சென்று இனம் காணப்பட்டு வரும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர் கிராம சேவையாளர்கள் சமூக பணியாளர்களுடன் இணைந்து உலர் உணவுப் பொருட்கள் கொண்ட பொதிகள் வழங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஜாட்சன் பிகிராடோ அவர்களின் தலைமையில் யாழ் தீவகப் பகுதிகளில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் சனிக்கிழமை (23.04.2022) வழங்கி வைக்கப்பட்டது
தீவு பகுதியில் உள்ள பிரதேச செயலாளர் கிராம சேவையாளர்கள் சமூக பணியாளர்களுடன் இணைந்து அல்லைப்பிட்டி மண்டைதீவு புங்குடுதீவு வேலணை, சரவணை, நைனா தீவு, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற பகுதிகளுக்கு அங்குள்ள கிராமசேவையாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கான 3350 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது
நாட்டில் தற்போது நிலவி வருகின்ற உணவு தட்டுப்பாடு உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம்
காரணமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவங்களை கொண்ட குடும்பங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை கருத்தில் கொண்டு மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கான நிவாரண பணிகள் நடைபெற்றுக் கொண்டு வரும் இதே நேரத்தில், தீவக மக்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் குறித்த பகுதிகளில் கிராமசேவையாளர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)