
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாணவர்கள் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்

கொத்தலாவல மருத்துவ கறுப்புச் சந்தையை உடனடியாக நிறுத்தக் கோரியும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்புக்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கே. டி. யு. மூலம் மருத்துவப் பட்டத்தை விற்கும் அமைச்சரவை தீர்மானத்தை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்திலிருந்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் மட்டக்களப்பு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை தனியார் மயப்படுத்தி அரச பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாணவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது,
- கே. டி. யு. மூலம் கல்வியை இராணுவ மயமாக்குவதை நிறுத்து
- தேசிய கல்விக்கொள்கை கட்டமைப்பை உடனடியாக வாபஸ்பெறு
- கொத்தலாவல மருத்துவ கறுப்புச் சந்தையை உடனடியாக நிறுத்துங்கள்
- அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கு
போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக வந்த மாணவர்கள் அங்கு தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இலவச கல்வியை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவோம் உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)