
posted 12th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம்

பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின் ஏற்பாடு செய்வதற்கு தயார் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் செயலகத்தில் நேற்று (11.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
பொன்னாவெளி பிரதேசத்தில் இருந்து தற்போதுதான் மக்கள் வெளியேறியதாக ஒரு பொய்யான கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது. ஆனால், அதில் உண்மை கிடையாது. மக்களை அங்கு வாழ விடாது எவரும் தடுக்கவில்லை.
ஆனால், அங்கு வாழும் சூழலுக்கேற்ற வகையிலான குடிநீர் முழுமையாக அற்றுவிட்டது. நிலப்பரப்பகள் எல்லாம் உவர் நிலமாக மாறிவிட்டது. அதனால், எதுவிதமான பயிர்ச் செய்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு முன்னரே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
அதுமட்டுமல்லாது சுண்ணக்கல் அகழ்வதற்கான திட்டம் உடனடியாக முன்னெடுக்கப்படும் விடயம் ஒன்றல்ல. அதுமட்டுமல்லாது மக்களது கருத்துக்களும் அதில் உள்வாங்கப்படும். அதேநேரம் குறித்த பகுதியை ஆய்வு செய்தால்தான் அங்கு குறித்த செயற்பாட்டை முன்னெடுக்கலாமா அல்லது கைவிட வேண்டுமா என்ற நிலைக்கு வரமுடியும்.
குறிப்பாக அய்வுகளின் பெறுபேறுகள் சென்றபோது திட்டமிட்டவகையில் சில விசமிகள் அதை தடுக்கின்றனர். இதேநேரம் ஆய்வு செய்தால்தான் ஒரு நிலைப்பாட்டை எட்டமுடியும். மாறாக ஆய்வின் முடிவுகள் பாதகமாக வருமாயின் அதை தடுப்பதற்கும் பின்னிற்கமாட்டேன்.
மக்களுக்கு ஏதாவதொரு அபிவிருத்தி அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கவரும் சந்தர்ப்பங்கள் அல்லது ஏதுநிலைகள் வரும்போதெல்லாம் இதர தமிழ்தரப்பினர் அவற்றை தடுக்கத்தான் முயற்சித்தார்களே தவிர அதை ஆராய்ந்து சிறப்பான தீர்மானங்களை எடுப்பதற்கு ஒருபோதும் முன்வருவதில்லை.
குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக கிடைத்த 13ஆவது அரசிலைமைப்பின் ஊடாகத்தான் எமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு ஓர் ஆரம்பமாக அமையும் என நான் அன்றிலிருந்து கூறிவருகின்றேன்.
ஆனால் அதை கடுமையாக எதிர்த்தார்கள். நடைமுறைக்கு கொண்டுவர விடமாட்டோம் என கூச்சலிட்டார்கள். ஆனால் இன்று அவ்வாறு கூச்சலிட்டவர்களே 13 தான் ஒரே வழி என இன்று முணுமுணுக்கின்றார்கள்.
இதேபோன்றுதான் இந்த பொன்னாவெளி விவகாரத்திலும் நான் மக்களுக்கு சாதகமான நன்மை விளைவிக்கும் ஒன்றுதான் என கருதுகின்றேன்.
அதேநேரம் பாதகம் என்று ஆய்வுகள் தெரிவித்தால் அதை நிறுத்துவதற்கும் பின்னிற்கமாட்டேன் என்றும் தெரிவித்திருந்த அமைச்சர் பொன்னாவெளியில் குடியேறுவதற்கு மக்கள் முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கூறினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
பொன்னாவெளி பகுதியில் ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஆய்வறிக்கை கிடைத்தால், அகழ்வு பணிகளுக்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் (11.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்;
நீண்டகாலமாக என் மீதான அவதூறுகளை பரப்பும் செயற்பாட்டில் தமிழ் கட்சிகள் செயற்படுகின்றன. அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இவ்வாறான சேறு பூசல்கள் மூலம் என்னை துரத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனாலையே என்னை துரத்த முடியவில்லை என்ற நிலையிருக்கும்போது சில குடிகாரர்களால் என்னால் துரத்த முடியாது.
இதேவேளை பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு தொடர்பான திட்டம் நீண்ட காலத்திற்கு முன்னரேமுன்னெடக்கப்பட்ட திட்டம். அதுமாத்திரமல்லாது, கடந்த கடந்த உள்ளூராட்சி தேர்தல் கால பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட அந்த திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பொன்னாவெளியை சூழவுள்ள மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் உள்ளன. அவற்றினை மக்களுடனான சந்திப்பின் ஊடாக கேள்வி பதில் முறையான கலந்துரையாடலை நடத்தவே குறித்த தினத்தன்று அங்கு சென்றிருந்தோம்.
குறிப்பாக சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கையின் சாதக பாதக தன்மை தொடர்பிலான ஆரம்ப ஆய்வு பணிகளுக்கான 12 திணைக்களங்களைச் சேர்ந்தவர்களுடன் சென்ற போதே சில அரசியல்வாதிகளின் ஏவலாளர்கள் அன்றைய தினம் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர்.
அன்று அங்கு கதைக்க கூடிய நிலையில யாரும் இருந்திருக்கவில்லை. சிலர் தமது அரசியலுக்காக வந்திருந்தார்கள். மற்றையவர்கள் போதையில் நின்றார்கள். அதனால் அவர்களோடு கதைக்க முடியாது என திரும்பி வந்தேன். மீண்டும் செல்வேன். மக்களின் வாழ்வாதரத்திற்காக தொடர்ந்து பயணிப்போன்.
இதேவேளை சுண்ணக்கல் அகழ்வுக்கான அனுமதிகள் வழங்குவதற்கான படிமுறைகள் உண்டு. அவற்றின் ஒரு கட்டமாகவே ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது. ஆய்வறிக்கையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டால் அகழ்வு நடவடிக்கைக்கான பணிகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)