
posted 30th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் - சாணக்கியன் இடையிலான சந்திப்பு

முதல் முதலாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்கள் ஓர் சிறப்பு விஜயம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்னும் வகையில் அவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பொன்று இடபெற்றது.
இதன்போது மாவட்ட மற்றும் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நேரடியாக முகம் கொடுக்கும் பிரச்சினைகளான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை, கனிய வளங்களான இல்மனைட் அகழ்வு, இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத காணி அபகரிப்பு, சட்ட விரோதமான மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மேலும் விளக்குகையில்;
மட்டக்களப்பு சார்ந்த விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விவசாய ஆரம்பக் கொடுப்பனவானது பொலன்நறுவை எனும் இடத்தினை சார்ந்தே இங்கு கொடுக்கப்படுகின்றது. ஆனால் இங்கு பயிரிடப்படும் போகங்கள் வித்தியாசமானதாகும். பல நேரங்களில் போகம் முடியும் தருவாயில் பணம் கொடுக்கின்றார்கள். உரத்துக்கான கொடுப்பனவும் இவ்வாறே நிகழ்கின்றது.
எமது மூலோபாய வாழ்வாதாரமான விவசாயம், மீன்பிடி, கால்நடை இவை மூன்றுமே இங்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். இதனால் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைந்து போகின்றது.
தேசிய ரீதியில் எடுத்துக்கொண்டால் எமது மக்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லாமையே இவ்வாறான சிக்கல்களையும், பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எமக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்குமிடத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் செழிப்புறும் பிரதேசங்களாக மாற்ற எம்மால் முடியும். மற்றும் எம்மால் எம் மக்களுக்கு தேவையான முடிவுகளை மேற்கொள்ள முடியும். வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். எமது மக்களுக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்க சர்வதேச பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மற்றும் TRC - Truth - Unity and Reconciliation Commission உண்மைக்கும் ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக நிலை கால சட்டம் சம்பந்தமான விடயங்களிலும் அரசாங்கம் எம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு வருகின்றது என்பதனையும் வலியுறுத்திக் கூறினார். மற்றும் சமகால அரசியல் தொடர்பான பல விடையங்கள் ஆராயப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)