
posted 10th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொது வேட்பாளர் யோசனை நடைமுறைச் சாத்தியமற்றது
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைக்கும் யோசனை சாத்தியமற்றது என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்று (09) செவ்வாய்க் கிழமை கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி ஒரு கட்சியாக இன்னமும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால், தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரையில் இது எவ்வாறாயினும் நடைமுறை சாத்தியமாகாது.
பொது வேட்பாளரை தேடிப் பிடிப்பதற்குள்ளேயே முரண்பாடுகள் பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ஆகவே, என்னுடைய கருத்து என்னவெனில் பேரம்பேச வேண்டிய சூழ்நிலைக்கு ஒற்றுமையாக பலமாக நாங்கள் இருக்க வேண்டும். அந்தப் பலத்தோடு நாங்கள் பேரம் பேசலாம்.
ஆனால், ஒரு பொது வேட்பாளர் என்றால் ஏனைய வேட்பாளர்களோடு நாங்கள் சமநிலையில் நிற்கின்றபோது சில சமயங்களில் எங்களின் பேரம் பேசும் பலம் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் எங்களோடு பேரம் பேசாமலும் போகலாம்.
இவ்வாறான சூழல்களும் இருப்பதால் பொது வேட்பாளரை தெரிவு செய்வதிலேயே இந்த விடயம் முடங்கி விடும் அல்லது சாத்தியமற்றதாக அமையும். அது பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய வாய்ப்பாகவும் அமையும் என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)