
posted 30th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சீல் வைக்கப்பட்ட சுகாதாரமற்ற உணவகங்கள்
திருநெல்வேலி பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவுடன் சீல் வைத்து மூடப்பட்டன.
பொது சுகாதார பரிசோதகரின் திடீர் சோதனையில் திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்துள்ளன. அது தொடர்பில் சுகாதார பரிசோதகரால் உணவக உரிமையாளர் அறிவுறுத்தப்பட்டு குறைகளை சீர் செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மறுபரிசோதனைக்காக நேற்று (29) திங்கட்கிழமை அந்த உணவகங்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர் சென்ற போது குறைகள் சீர் செய்யப்படாததை அடுத்து , மூன்று உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில் உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களுக்கு 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவக சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகங்களுக்குச் சீல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து மூன்று உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)