
posted 26th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கோரிக்கைகளுடன் போராட்டத்தில் குதிக்கும் வேலையற்ற பட்டதாரிகள்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் வரும் திங்கட்கிழமை (29) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வேலையற்ற பட்டாதாரிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தனர்.
எங்களால் மேற்கொள்ளப்படவுள்ள ஜனநாயக அடிப்படையிலான போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதுடன் எங்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நாடு தழுவியரீதியில் பட்டதாரிகள் அனைவரும் ஜனநாயக அடிப்படையில் அமைதியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வட மாகாண பட்டதாரிகளாகிய நாமும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கவனவீர்ப்பை மேற்கொள்ளவுள்ளோம்.
- பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் போட்டிப்பரீட்சைகள் நிராகரிப்பு செய்ய வேண்டும்
- ஏற்கனவே அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மீண்டும் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையில் கொண்டு வருதல் நியாயமற்றது. அது வேலையற்ற பட்டதாரிகளை பாதிக்கின்றது
- வட மாகாணத்திலுள்ள விசேட தேவையுடைய பட்டதாரிகளின் வாழ்வியல் தொடர்பிலான அரசாங்கத்தின் கரிசனை என்ன?
- வேலையற்ற பட்டதாரிகளும் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமானங்களும், சவால்களும் அதன் ஊடாக ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் பட்டதாரிகளின் எதிர்காலம் குறித்தும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் என்ன?
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (29) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்று தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)