
posted 29th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உரிமையில்லாத மக்களாக இலங்கையில் நாங்கள்
உரிமை இல்லாத மக்களாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்தோம். எனவே, எங்கள் உரிமைகளைத் தக்கவைத்து மலையகம் மேலும் வளர்ச்சியடையத் தேவையான திட்டத்தை வைத்து ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தொழிலாளார் காங்கிரஸ் முடிவெடுக்கும் - இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளார் காங்கிரஸின் முக்கியஸ்தருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளார் காங்கிரஸ் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர் யார் இந்த நாட்டை முன்னேற்றக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதோ, அவருக்கு வாக்களித்து எங்களது உரிமைகளைத் தக்கவைத்து மலையகம் மேலும் வளர்ச்சியடைய தேவையான திட்டத்தை வைத்து முடிவெடுக்கும் என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை யாரும் பொறுப்பெடுக்காத நிலையில் நாட்டைப் பொறுப்பேற்று முன்னேற்ற வேண்டும் என மிகுந்த ஒரு முயற்சி எடுத்தார். ஜனாதிபதி இந்த நாட்டை பொறுப்பெடுக்கும் போது டொலர் ஒன்று 350 ரூபாயாக இருந்ததுடன் அரிசி இல்லை, டீசல் இல்லை, சீனி இல்லை, மருத்துவமனைகளில் மருந்து இல்லை. இப்படித்தான் இருந்தது இலங்கை.
ரணில் நாட்டை பொறுப்பெடுத்த பின்னர் இன்று டொலர் 300 ரூபாயாகவும், எல்லோரும் வாழக்கூடிய ஒரு நாடாக மாற்றியிருக்கின்றார். இவ்வாறு செயல்படுத்திக் காட்டியுள்ள இந்தத் தலைவரை நம்பி பின்னால் போகும் போது எதிர்வரும் 5 வருடத்தில் அதிகமாக வளர்ச்சி அடைவதற்கான வழிகள் அவரிடம் இருக்கின்றது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அதைவிடுத்து மாற்று முடிவுகள் எடுக்கும் போது அவர்கள் புதுப் புது கொள்கைகளை மாற்றும் போது மக்கள் மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்குள் போகும் வாய்ப்புக்கள் ஏற்படும் என்ற பெரும் அச்சம் நிலவுகிறது.
அத்துடன் ஒரு உரிமை இல்லாத மக்களாக இந்த நாட்டில் வாழ்கின்றோம். அதனால் எங்கள் வாக்குகள் வீணடிக்கப்படாமல் யார் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதோ, யார் இந்த நாட்டை முன்னேற்றக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதோ அவருக்கு வாக்களித்து எங்களது உரிமைகளைத் தக்கவைத்து மலையகம் மேலும் வளர்ச்சியடையத் தேவையான திட்டத்தை வைத்து இலங்கைத் தொழிலாளார் காங்கிரஸ் முடிவெடுக்கும் என்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)