
posted 30th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இலங்கையில் மே தினக் கொண்டாட்டங்கள்
உலக தொழிலாளர் தினமான மே தின கொண்டாட்டங்கள் இலங்கையில் மே 1ஆம் திகதி புதன்கிழமை கோலகலமாக இடம்பெறவுள்ளன.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மே தின ஊர்வலங்களும், மே தின கூட்டங்களும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்களும், ஊர்வலங்களும் தலைநகர் கொழும்பில் ஏட்டிக்கு போட்டியாக இடம்பெறவுள்ளதுடன் தமது கட்சிகளுக்கு உள்ள மக்கள் ஆதரவினை வெளிக்காட்டும் வகையிலான பாரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சி நான்கு முக்கிய நகரங்களில் மே தின நிகழ்வுகளை நடாத்தவுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கியமான நாடு சுபீட்சமான எதிர்காலம் எனும் தலைப்பிலும் மே தின நிகழ்வுகளை நடாத்தவுள்ள அதேவேளை, பொது ஜன பெரமுன கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி என்பனவும் மே தின நிகழ்வுகளை நடாத்தவுள்ளன.
இதேவேளை வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி இரு இடங்களில் மே தின ஊர்வலம் மற்றும் மேதினக் கூட்டம் என்பவற்றை நடாத்தவுள்ளன. கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திலும், பெரிய கல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலிலும் நாளை 1ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு இந்த மே தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மே தினக் கருத்தரங்கு அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு பிரதேசத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதுடன், தொழில் ரீதியாக தகுதி வாய்ந்த இலங்கை உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கத்தின் மே தின கருத்தங்கு சாய்ந்தமருது பொலிவோரியன் கிராம கலாச்சார மண்டபத்திலும் நடைபெறவுள்ளதாக செயலாளர் எம்.ஹுஸைன் முபாறக் தெரிவித்தார்.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)