
posted 18th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு

பொதுமக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றி வளைப்பின் போது கல்முனை மாநகர பிரதேசத்தில் மூன்று கிளைகளைக் கொண்டு சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் இயங்கிய மருத்துவ நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஷகீலா இஸ்ஸதீனின் ஆலோசனை வழிகாட்டலில் இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இந்த சுற்றிவளைப்பின்போது தன்னை வைத்தியராக அடையாளம் காட்டிக்கொண்டு எவ்வித அரச அங்கீகாரமுமின்றி இயங்கிவந்த மருத்துவ நிலையமும், அழகுக்கலை நிலையமும், பயற்சி நிலையமும் நடத்தி வந்த நபர் இனங்காணப்பட்டார். அவரிடமிருந்த மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் ஆபத்தான மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. இது மட்டுமின்றி முறையான கல்வித் தகைமையோ, தொழில் தகைமையோ இல்லாத குறித்த நபர் மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத மருந்துகளைப் பாவித்து வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டது. அவர் மருத்துவராகத் தன்னை அடையாளப்படுத்திய சான்றுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கல்முனை மாநகர பிரதேசத்தில் மூன்று கிளைகளைக் கொண்டு இயங்கிய இந்த நிலையம் மனித உயிர்களுக்கும், சுகாதார நிலைக்கும் சவால் விடும் வகையில் இயங்கி வந்தமையை கண்டறிந்து இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை சுதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)