முற்பணம் 10,000 ரூபா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அரசாங்க ஊழியர்களுக்கான புதுவருட விசேட முற்பணக் கொடுப்பனவை, தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நிதியமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு என்பவற்றின் செயலாளர்களுக்கு மேற்படி சங்கம் அவசர மகஜர்களை அனுப்பி வைத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரச ஊழியர்களுக்கு புது வருட விசேட முற்பணம் வழங்கப்படுவதன் பிரதான நோக்கம் புது வருடத்தில் அரச ஊழியர்களது பிள்ளைகளுக்குரிய பாடசாலை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காகும்.

ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ள 4000 ரூபாவைக் கொண்டு தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதனையும் செய்து கொள்ள முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் அப்பியாசக் கொப்பிகள் உட்பட பாடசாலை உபகரணங்களின் விலைகள் பன்மடங்காக அதிகரித்துள்ள சூழ்நிலையில் இத்தொகையைக் கொண்டு ஒரு பிள்ளையின் தேவையைக் கூட முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில் அரச ஊழியர்கள் உள்ளனர்.

எனவே, இத்தொகையை ஆகக்குறைந்தது 10,000 ரூபா வரை அதிகரிப்பதன் மூலமே தமது பிள்ளைகளின் தேவைகளை அரச சேவை ஊழியர்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

முற்பணம் 10,000 ரூபா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)