
posted 5th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
மன்னார் மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள்
மீனவர்களுக்கு என சீனா அரசாங்கத்ததால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட மானிய அடிப்படையிலான எரிபொருள் இன்று திங்கள் கிழமை (05) மன்னார் மீனவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீனா அரசாங்கம் இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு ஒன்பதாயிரம் மெற்றிக் தொன் டீசல் மானிய அடிப்படையில் கொடுப்பதற்காக வழங்கியிருந்தது.
இதை இலங்கை அரசாங்கம் மண்ணெணெய்யாக ஒரு படகுக்கு தலா 150 லீற்றர் வீதம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்த மண்ணெணெய் வழங்கும் நிகழ்வு மன்னாரில் திங்கள் கிழமை (05.06.2023) சம்பிரதாய முறைப்படி இடம்பெற்றது.
முதற்கட்டமாக பள்ளிமுனை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல், மன்னார் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திரு.கலிஸ்டன், கடற்தொழில் அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சந்துரு உட்பட கடற்தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் கடற்தொழிலாளர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களின் படகுகளுக்கான ஒரிஜினல் (நீல நிற) புத்தகம் மற்றும் செல்லுபடியான அனுமதி பத்திரம் உள்ள 2431 மீனவர்கள் இந்த மானிய அடிப்படையில் வழங்கும் மண்ணெணெய்க்கு தகுதி பெற்றுள்ளனர்.
இயந்திரம் பொருத்தப்பட்ட மீன்பிடி கலங்களுக்கே இவ் எரிபொருள் வழங்கப்படுகின்றது.
முதல்நாள் வழங்கப்பட்ட இன்றையத் தினம் (05) முதற் கட்டமாக பள்ளிமுனை மீனவர்கள் நூறு பேருக்கு தலா 75 லீற்றர் வீதம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் பகுதி பகுதியாக ஏனையோருக்கும் வழங்கப்படும் என இதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)