
posted 24th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொலிஸ் மா அதிபராக செயல்பட தேசபந்து தென்னக்கோனுக்கு தடை
பொலிஸ் மா அதிபராக செயல்பட தேசபந்து தென்னக்கோனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (24) புதன்கிழமை பிறப்பித்தது.
இதன்படி, இந்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சட்டத்துக்கு அமைய பொருத்தமான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி, மகிந்த சமயவர்த்தன ஆகிய மூன்று நீதியரசர்களை கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துடன், மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, தேசபந்து தென்னக்கோன் ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த மனு விசாரணை நிறைவடையும் வரை பிரதிவாதியான தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் தொடரவும், தனது அதிகாரங்களை செயல்படுத்தவும், கடமைகளை செய்வதற்கும் நீதியரசர்கள் தடை விதித்துள்ளனர்.
மனுக்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதியரசர்கள் நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் மனுக்களை விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்டோர் சமர்ப்பித்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)