
posted 27th August 2021

மன்னார், வவனியா, முல்லைத்தீவு மாவட்டங்கள் தனது வன்னி தேர்தல் மாவட்டத்தில் அடங்கலாக உள்ள பிரதேசங்களில் நிர்ணயிக்கப்பட்ட பொருட்களின் விலைகளுக்கு விற்கப்படாமல் அதிகமான இலாபம் வைத்து விற்கப் படுவதால் பாமர மக்கள் பெரும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் பந்துல குணவர்த்தனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கடிதத்தில் தெரிவித்ததாவது;
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தும் கூட நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறுபட்ட விலையில் பொருட்கள் யாவும் இப்பகுதிகளில் விற்கப்படுகின்றன. இந்த விவகாரத்தை ஆராய எந்த அரச அதிகாரிகளும் முன் வருவதாக தெரியவில்லை. இதற்கு காரணம் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு என்றே கூறவேண்டும்.
இந்நிலை காரணமாக, மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது. எனவே இவ் விடயத்தினை கவனத்தில் இருத்தி மக்களின் அவதி நிலையினை போக்க உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ