
posted 31st July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிள்ளையை தேடும் தாய்க்கு பயங்கரவாதி முத்திரையா?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராடிவரும் தாய்மார்கள்மீது பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தை மலினப்படுத்தும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத் தலைவி அ. அமலநாயகி கவலை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு திங்கட்கிழமை அமலநாயகி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் மட்டு. ஊடக அமையத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊடகச் சந்திப்புகளை நடத்தியமை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டம், மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர் போராட்டத்தில் கலந்து கொண்டமை, பல்கலைக்கழகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டமை, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை, சர்வதேச பெண்கள் அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுகின்றமை, புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றமை, புலிகளை மீளுருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த விசாரணையின் போது, 'குற்றம் சுமத்தப்பட்டவர்களை விசாரிக்காது, பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கும் முனைப்புடன் அரச புலனாய்வு கட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
எமது போராட்டத்தை எங்களை அச்சுறுத்துவதன் ஊடாக முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைக்கின்றனர். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் எமது உயிர் போனாலும் எமது போராட்டம் தொடரும் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)