posted 16th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழ்ப்பாணத்தில் நேற்று (15) இந்திய சுதந்திரதின நிகழ்வு
எஸ் தில்லைநாதன்
இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நேற்று (15) செவ்வாய் காலை இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் வாசித்தார்.
இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் உயர் நீர்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவுக்கல் ஒன்றையும் துணைத் தூதுவர் திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், கல்வியலாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு!
எஸ் தில்லைநாதன்
கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் திங்கள் (14) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் வசித்து வருபவருமான தனபாலசிங்கம் வைகுந்தன் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த 7 வருடங்களாகக் குடும்பத்தினருடன் மகரகமவில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிகை அலங்கார நிலையத்தில் பணியாற்றி வந்த குறித்த நபர், நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்புவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், வீட்டுக்கு வருகை தராத அவரைக் குடும்பத்தினர் இரவு 7.30 மணியளவில் தேடியபோது வீட்டுக்கு அருகாமையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா திருநாள் திருப்பலி
எஸ் தில்லைநாதன்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா திருநாள் திருப்பலி செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது
பலாலி பங்குத்தந்தை மைக்கல் செளந்தரராஜன் அடிகளார் தலைமையில் காலை 6.00 திருப்பலி ஆரம்பமானது.
திருப்பலியில் ஏராளமான பக்தர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் கலந்து கொண்டனர்.
பெருவிழாவை முன்னிட்டு மாலை திருவிருந்தும் அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். சிறைக்குள் கைதிக்கு தொலைபேசி கொடுத்த சிறைச்சாலை அலுவலர் கைது!
எஸ் தில்லைநாதன்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கைத்தொலைபேசி வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 13ஆம் திகதி உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும்போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம் கைத்தொலைபேசியை வழங்கியுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைதி களுத்துறை சிறைச்சாலையில் நன்னடத்தை இல்லாத காரணத்தால் நன்னடத்தைக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர். ஹெரோயின் வழக்கில் 14 வருட தண்டனை கைதியாவர்.
சி.சி.ரி.வி கமெராக்கள் மூலம் இது கண்காணிக்கப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் கே. வி.ஏ. உதயகுமாரவின் வழிகாட்டலில் கடந்த 15ஆம் திகதி சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டது.
பின்பு நடைபெற்ற விசாரணையின்போது டி.கே. எதிரிசிங்க என்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் தான் தொலைபேசி கொடுத்தார் எனக் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வீட்டுத்தோட்டப் போட்டிக்கான விதைகள் இலவச விநியோகம்!
எஸ் தில்லைநாதன்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக "மாணாக்க உழவர்" என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பற்றாக்குறை, நஞ்சற்ற உணவுற்பத்தி, மாணவர்களை மன அழுத்தங்களில் இருந்து விடுவித்தல் ஆகியவனவற்றை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இப்போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தற்போது இலவசமாக விதைப் பொதிகளை வழங்கி வருகின்றது.
இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் யாழ்ப்பாணம், அரசடிவீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தையும், விதைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இம் மாதம் 16, 17, 18 ஆகிய திகதிகளில் தினமும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை பெற்றோர் சகிதம் வந்து மாணவர்கள் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் சிறப்பாக வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்பவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை வளாகத்தில் நுழைந்த காட்டுயானை
எஸ். தில்லைநாதன்
வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் நேற்றுக் (15) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து குறித்த காட்டு யானையைக் காட்டுக்குள் விரட்டியதாகவும் ,எனினும் குறித்த யானை அக் கிராமத்தினை அண்டிய பகுதியிலேயே தொடர்ந்து சுற்றிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித்த யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)