
posted 15th January 2023
நிந்தவூரிலிருந்து விடுமுறையைக்கழிப்பதற்காக குடும்ப உறுப்பினர்கள் பலருடன், நீண்ட தூரத்திலுள்ள புல்லுமலை பகுதிக்கு சென்று படகுச்சவாரி செய்த 35 வயது இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிர் நீத்துள்ளார்.
நிந்தவூர் காட் வீதியைச் சேர்ந்தவரும், மூன்று குழந்தைகளின் தந்தையுமான ஆதம்லெவ்வை அர்பான் என்பவரே அங்கு படகுச் சவாரி செய்கையில் படகு கவிழந்து நீரில் மூழ்கி உயிர் நீத்துள்ள சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக்கழக உயர்பீட உறுப்பினரான அர்பான் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டிவந்த ஒருவராவார்.
கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துயர சம்பவத்தின் போது நீரில் மூழ்கிய அவரை உறவினர்களும், சுழியோடிகளும் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாது கூடவே சுற்றுலா சென்றிருந்த உறவினர் பெரும் பதட்டத்திலிருந்தனர்.
இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் கல்குடா டைவர்ஸ், மற்றும் அகீல் அவசர சேவைப்பிரிவுக்கு உதவி கோரப்பட்டதையடுத்து, அவர்கள் குறித்த புல்லுமலைக்கு விரைந்து அவர்களது சுழியோடிகளின் தேடுதல் முயற்சியின் போது பத்து நிமிடங்களிலேயே உயிரற்ற நிலையில் உடலை கண்டுபிடித்துக் கொடுத்தனர்.
இதனையடுத்து இளைஞனின் உடல் கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, செங்கலடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையும், மரண விசாரணையும் இடம்பெற்றது.

The Best Online Tutoring
மேலும் இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான அலி சாஹிர் மௌலானா, பைஸால் காசிம் அவரது இணைப்பாளர் எம்.கபீர், கல்குடா டைவர்ஸ் அணியின் பொறுப்பாளர்கள் அகீல் அவசர சேவைப்பிரிவின் உரிமையாளர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஆகியோரும் பிரசன்னமாக விருந்தனர்.
நீரில் மூழ்கி உயிர் நீத்த சமூகப்பற்றாளர் அர்பானின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (ஞாயிறு) நிந்தவூரில் இடம்பெற்றது.
இதேவேளை 24 மணி நேர சேவை வழங்கிவரும் கல்குடா டைவர்ஸ் அணியினர் மற்றும் அகீல் அவசர சேவைப்பிரினருக்கும் நிந்தவூர்ப் பிரதேச மக்களும், பொது அமைப்புகளும் பெரு நன்றி தெரிவித்துள்ளன.
விசேடமாக ஓட்டமாவடியிலிருந்து பலமைல் தொலைவிலுள்ள புல்லுமலைக்கு சென்று டைவர்ஸ் அணியின் பொறுப்பாளரும், விசேட சுழியோடியுமான கபீர் முஹம்மத் பௌஸ்தீன், மற்றும் விசேட சுழியோடியும், உயிர் காப்பு வீரருமான கபீர் முஹம்மத் இப்றாகீம் ஆகியோர் தேடும் பணியை முன்னெடுத்தமைக்கு விசேட நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆதம்லெவ்வை அர்பானின் இந்த அகாலமரணம் நிந்தவூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.